காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

மோதிய அலைகளில் ஆடியபடியே
பாதங்கள் படுமென ஏங்கியபடியே
நாயகன் திருமுகம் தேடியபடியே
தோழமை எனும்சொல் சூடியபடியே

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

துடுப்புகள் ஏனோ அசையவுமில்லை
திடுக்கிட்ட வேடன் தெளியவுமில்லை
வழக்கத்தின் மாற்றம் விளங்கவுமில்லை
இலக்குவன் ஏதும் அறியவுமில்லை

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

சொந்த நதியிலா சொந்தம் தொலைவது
எந்தத் திசையில் நாவாய் செல்வது
வந்ததும் சென்றதும் விடுகதையானது
சந்தக் காவியம் சிறுகதையானது


காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

குகனொடும் ஐவர் என்றதும் பொய்யா
வகையறியாதவர் வென்றது மெய்யா
சகலரும் காணச் சென்றனன் ஐயா
ரகுவரன் தோள்களில் ராவணன் கையா


காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

வேர்விடும் சொந்தம் வருந்தியதென்ன
கூரிய கணைகள் குழம்பியதென்ன
கார்நிற வண்ணன் கணக்குகள் என்ன
மாறிய திசையின் மர்மங்கள் என்ன

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *