பாரத யுத்தம் நெருங்கிடும் நேரம்
பாண்டவர் தூதன் பரந்தாமன்
மாபெரும் கலகம் செய்திட வந்தான்
மாதவன் கேசவன் யதுபாலன்
 
குந்தியின் அரண்மனை சென்றவன் அவளது
கடந்த காலத்தைத் தோண்டிவிட்டான்
அன்றவள் நதியில் வீசிய மகன்தான்
கர்ணன் என்பதைக் கூறிவிட்டான்
கதறிய குந்தியை அமைதிப் படுத்தி
காரியக் காரன் தூண்டிவிட்டான்
எதிர்வரும் போரில் இரண்டு வரங்களை
கேட்டிடச் சொல்லிப் போகவிட்டான்
 
மைந்தனின் அரண்மனை வாசலில் வந்து
மாதவள் நின்றாள் அழுதபடி
வந்தவள் தாயென உணர்ந்ததும் கர்ணன்
விழுந்தே அழுதான் தொழுதபடி
பேசாக் கதைகள் பேசிய பின்னர்
பாசத்தில் அன்னை வரம்கேட்டாள்
ஆசை மகனும் என்ன வரங்களை
அவள்கேட்பாளென முகம்பார்த்தான்
 

பாரதப் போரினில் பார்த்திபன் தவிர
பாண்டவர் பிறருடன் மோதாதே !

நாகாஸ்திரத்தை ஒருமுறையன்றி
இன்னொரு தடவை ஏவாதே!”
 

கேட்டதும் கர்ணன் சிரித்துக்கொண்டான் அவள்
கேட்ட வரங்கள் கொடுத்துவிட்டான்
போய்வருவேன் என் குந்தி கிளம்பிட

தாயே நில்லென்று தடுத்துவிட்டான்
 
என்றோ தொலைத்த பிள்ளையைப் பார்த்திட

இன்றைக்கு வந்தாய் வரங்கள் கொண்டாய்
என்ன வேண்டும் மகனே எனநீ
என்னைக் கேட்க மறந்துவிட்டாய்
போர்முடியும் வரை நானுந்தன் மகனென
யாரிடமும் நீ சொல்லாதே
போரினில் நானுயிர் விட்டதும் எனைஉன்
மடியினில் கிடத்திட மறவாதே
அதன்பின்னர் உலகம் அறியட்டும் உண்மை
அன்புமகனின் மொழிகேட்டு
இதயம் வலிக்க அழுத குந்தியும்
மெதுவாய் நடந்தாள் வழிபார்த்து

 

 

தொடரும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *