MS

ஆங்கில இதழொன்றில் டி.எம். கிருஷ்ணா எம்.எஸ். பற்றி எழுதிய நெடுங்கட்டுரை ஒன்று அரவிந்தன் மொழிபெயர்ப்பில் சிறுநூலாக வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு, “காற்றினிலே கரைந்த துயர்.”

சங்கீதத்துக்கும் சர்ச்சைக்கும் பெயர் பெற்ற டி.எம்.கிருஷ்ணா, ஓர் இசைக்கலைஞர் தன்னிடம் “எம்.எஸ். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மோசடி” என்று சொன்னதைப் பற்றிய குறிப்புடன் இந்நூல் தொடங்குகிறது.

இந்நூலின் “ஆதார சுருதி” கல்கி சதாசிவத்தின் வருகைக்குப் பின்னால் எம்.எஸ். இசையில் நேர்ந்த மாற்றங்களைக் குறிப்பதாகும். இதனை நூலாசிரியரின் சொற்களிலேயே சொல்ல வேண்டுமென்றால், “சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த பட்டத்தின் நூலில் பெரிய கல்லொன்றைக் கட்டிவிட்டாது போல் ஆகிவிட்டது.” (ப.35)

எந்த ராகத்தை எவ்வளவு நேரம் பாட வேண்டும் என்பது வரையில் சதாசிவம் தீர்மானிக்க முற்பட தொடக்கத்தில் எழுப்பிய மெல்லிய ஆட்சேபணைகளும் அடங்கி துல்லியமாய் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எம்.எஸ். இசைக்கத் தொடங்கினார் என்பதை பலவிதங்களிலும் டி.எம்.கிருஷ்ணா நிறுவ முற்படுகிறார்.

“எம்.எஸ். போன்றதொரு கலைஞர், இசைக்கலைஞராக இல்லாத ஒருவர் நிர்ணயித்த விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டது ஏற்றுக் கொள்ளவே முடியாதது-. அப்படிக் கட்டுப் படுத்தியது அவருடைய கணவராகவே இருந்தாலும்கூட.” (ப.43)

இசைத்துறையின் நுணுக்கங்களை நன்கறிந்த ஒருவர் இந்நூலை எழுதியிருப்பதாலேயே இது கூடுதல் கவனம் பெறுகிறது. தூயகலைகூட சந்தைப்படுத்தலுக்கு ஆளாகும் வேளையில் என்னென்ன விபத்துகள் ஏற்படும் என்பதை இந்நூலில் டி.எம்.கிருஷ்ணா விரிவாகப் பேசியிருக்கிறார்.

கட்டமைக்கப்படும் எந்த பிம்பமும் கட்டுடைக்கப்படும் என்பது பொது விதி. அதற்கு எம்.எஸ். இலக்கா, விதிவிலக்கா என்பதை விவாதங்கள் வழியே இசையுலகம் கண்டுணர வேண்டியது அவசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *