நீரலையின் சாட்டைகொண்டு ஆடுகிறாள் அன்னை
நேரவரும் யாவரையும் சாடுகிறாள் அன்னை
பேரொலியின் தாளமிட்டுப் பாடுகிறாள் அன்னை
பாய்ந்துவந்து எனையணைக்கத் தேடுகிறாள் அன்னை

ஆடுகிறாள் அன்னை-அவள் -தேடுகிறாள் என்னை

வான்கருணை அருவியாக வந்து இறங்கும்-அதில்
ஊன்நனைந்து உயிர்நனைந்து உள்ளம் மயங்கும்
நான்தொலைந்து போக அங்கே நேரம் அரும்பும்
தேன்பொழிந்து தேன்பொழிந்து தேங்கி நிரம்பும்

நேரம் அரும்பும்-தேன் -தேங்கி நிரம்பும்

வினைகரைக்கும் கருவியைத்தான் மேனியென்கிறோம்
விரைந்துவிழும் அருவியைத்தான் ஞானியென்கிறோம்
கனவினிலே காணும் இன்பம் கானலென்கிறோம்
கண்னெதிரே விழும் அருவி காளியென்கிறோம்

ஞானியென்கிறோம்-அருவி-காளியென்கிறோம்

நீர்த்திரளின் அற்புதம்தான் நமது குற்றாலம்-சிவன்
ஊர்த்துவத்தின் நடனத்திலே அருவி பொற்றாளம்
கோர்த்துவைத்த வேதமிங்கே கோடி கற்றாலும்
ஆர்த்துவரும் அருவிமுன்னே அறிவு தாம்பூலம்

நமதுகுற்றாலம்-அது சிவனின் பொற்றாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *