என் பால்ய நண்பன் அருண் அமெரிக்காவின் காதலன்.அவன் பாஸ்டனில் இருந்த நாட்களில் அவனுடன்காரில் டி.எம்.எஸ் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நயாகரா சென்றபோது அவன் சொன்னது இன்றும்
நினைவிருக்கிறது.” America is an Idea”.மனித சமூகம் ஒவ்வொன்றுமே தன் இலட்சிய வாழ்முறையை வடித்தளிக்க முற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.அப்போது தனக்கிருக்கும் அமெரிக்கக் காதலையும் மீறி அருண் கவலைப்பட்ட விஷயம் தனிமனிதர்களும் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடிய உரிமை. அநேகமாக அந்த சட்டம் 2005ல்தான் முன்வரைவு கண்டதாக ஞாபகம்.

யாரேனும் அந்நியர் தன் வீட்டுக் கதவைத் தட்டினல்,அது தன் பாதுகாப்புக்கு பாதிப்பென்று வீட்டிலிருப்பவர் கருதினால் கூட சுட்டுவிட முடியுமே என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.அவன் காரில் ஜிபிஎஸ் வழிகாட்டத் தடுமாறிய போது யாரிடமவது வழிகேட்கக் கூட அவன்யோசித்தான். ஒருவரிடம் சென்று வழிகேட்பது கூட அவரின் அந்தரங்கத்துக்குக் குந்தகம் என்பதாக எண்ணுபவர்களின் தேசமது.

துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் உண்டென்னும் விதமாய் அறிவிக்கப்பட்டதில்வந்த ஆபத்துகளில் ஒன்று சாண்டி ஹுக் தொடக்கப்பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கி சூடும் அந்த சம்பவத்தில் இருபது குழந்தைகள் உட்பட இருபத்தேழு பேர்கள் இறந்ததும் ஆகும்.

நம்மூரில் ஒரு தனியார் பள்ளிக்குள் கூட தொடர்பில்லாதவர்கள் நுழைந்துவிட முடியாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாயிருக்க,தன் அன்னையை வீட்டிலேயே கொன்றுவிடு அன்னை பணிசெய்த பள்ளிக்குள் புகுந்து பிஞ்சுகளையும் பெரியவர்களையும் பதம் பார்த்திருக்கிறான் அதானி லான்ஸா. அதே நாளில் சீனவிலும் ஒரு தொடக்கப்பள்ளி அருகே ஒருவன் கத்தியுடன் இருபத்தெட்டு குழந்தைகளைத் தாக்க முற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது,அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.நல்லவேளையாக சீனாவில் நிகழ்ந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஒன்றுமில்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த சம்பவத்துக்கான காரணம் என்று நாம் ஒன்றை யூகிக்க முடியும்.அதானி லான்ஸாவின் அன்னை அந்தப் பள்ளியில் பணிபுரிந்தவர் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடன் நேரம் செலவிடாத அன்னையையும் அதற்குக் காரணமான பள்ளிப் பிள்ளைகளையும் மனநோய் முற்றிக் கொன்றிருக்கக் கூடும் என்பது மேலோட்டமான யூகம் மட்டுமே.

விக்கி ஸாட்டோ

பள்ளிப் பிள்ளைகளைக் காக்க தன்னையே கவசமாக்கி கொடூரனின் துப்பாக்கி முன்னர் பாய்ந்து உயிர்நீத்த விக்கி ஸாட்டோ என்னும் வீராங்கனை நம் வணக்கத்துக்க்குரியவர்.”துப்பாக்கி எப்போது
பூப்பூப்பது”என்பது கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்றின் தலைப்பு. எல்லோரும் துப்பாக்கிவைத்திருப்பது மனித உரிமையின் அடையாளமா,உயிர்வாழும் உரிமைக்கான அச்சுறுத்தலா என்பதை
அமெரிக்கா முடிவு செய்ய வேண்டிய நேரமிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *