(02.01.2012  கோவை மாஸ்திக்கவுண்டன்பதி பாலா பீடம் ஸ்ரீ விஸ்வசிராசினி தரிசன அனுபவம்)

ருத்ர வீணையின் ஒற்றை நரம்பினில்
ருசிதரும் ராகங்கள்
முத்திரை பிடிக்கும் மோன விரல்களில்
தாண்டவக் கோலங்கள்
ரத்தினத் தெறிப்பாய் விழுகிற வார்த்தையில்
ரூபக தாளங்கள்
எத்தனை பெரிய அற்புதம் இங்கே
எதிர்வரும் நேரங்கள்!!

பாவை விளக்கின் புன்னகைச் சுடரொளி
பொலியும் பார்வையிலே
கூவிய தெய்வக் குயிலின்  சாயல்
மந்திரக் கோர்வையிலே
தேவியின் வாயிலில் தென்றலின் சாமரம்
வெய்யில் வேளையிலே
ஏவல்கள் தாங்கவும் காவல்கள் செய்யவும்
கந்தர்வர் சேவையிலே

காற்றின் விசையாய் கடவுளின் இசையாய்
காட்சி கொடுப்பதுயார்
ஏற்றிய சுடராய் எழுதா மறையாய்
எல்லாம் தருவதும் யார்
நேற்றின் நிழலாய் நாளையின் விடிவாய்
நின்று சிரிப்பதும் யார்
ஆற்றின் அலையாய் அலைமேல் மலராய்
ஆர்த்திடும் அமைதியும் யார்

ஞானியர் வழிவரும் வாணியின்  மந்திர
நாதங்கள் அதிர்ந்துவரும்
வானிலும் மண்ணிலும் வளர்பிறை நிலவிலும்
வாத்சல்யம் நிறைந்துவிடும்
தானெனும் ஒன்றினைத் தேடவே யாவரும்
தரைமிசை வருகின்றோம்
தேனெனும் மந்திரம் திசைகளில் ஒலிக்கையில்
தீர்ந்து விடுகின்றோம்

மவுனத்தின் கருவில் நாதத்தின் ரூபம்
மலர்வதைக் காட்டுகிறாய்
தவமெனும் கனலில் கங்கையின் வேகத்
திமிறலைக் கூட்டுகிறாய்
சிவமெனும் அருளை சுடர்தரும் இருளை
சிந்தையில் நாட்டுகிறாய்
குவலயம் முழுதும் கருணையில் மலரும்
கணமொன்றை ஆக்குகிறாய்

இவரைப் பற்றி இன்னும் அறிந்திட………..
http://www.balarishi.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *