முன்பொரு பிறவியில் முகம்பார்த்தேன் -உன்
மோன நெருப்பிலென் வினை தீர்த்தேன்
பின்னரும் பிறவிப் பிணிசேர்த்தேன் -உன்
பொன்னிழல் சேர்ந்திடும் வழிகேட்டேன்

கருவூர் குடிபுகும் உயிருக்கெல்லாம்- நல்ல
கதிதர உனக்குத் திருவுளமோ
நெரூரில் அமர்ந்த நல்லொளியே- உன்
நெஞ்சினில் எனக்கும் ஓரிடமோ

திக்குகள் அம்பரம் என்றிருந்தாய்-கொண்ட
தேகத்தின் எல்லைகள் தாண்டிநின்றாய்
பக்கபலமே சதாசிவமே-எங்கள்
பிரம்மேந்திரனே அருள்தருவாய்

மின்னல் தெறிக்கும் அருள்நாதம்-அன்று
மணலில் எழுதிய உன்கீதம்
நின்று நிலைக்கும் அவதூதம் -உன்
நிசப்தம் தானே சதுர்வேதம்

2

ஞான சதாசிவமே நானிந்த வையகத்தில்
ஊனில் சதாஅவமே ஓர்வதனால்-தானாய்த்
தெளியவழி யில்லை தயாபரனே உந்தன்
ஒளிவழியை ஏதென் றுணர்த்து.

சீர்த்த மலர்ப்பாதம் சிந்தை இருத்தவோ
கீர்த்தனைகள் பாடிக் களிக்கவோ-வேர்த்தடமே
இல்லா திருவினைகள் எல்லாம் களையவோ
சொல்லாய் சதாசிவமே

கற்றவழி செல்லுங்கால் கர்வந் தடுக்கியது
பற்றுவழி பாரம் பெருக்கியது-மற்றுவழி
காணாச் சிறுவன் கலக்கந் தனைதீர்த்து
பேணாய் சதாசிவமே பார்த்து

நல்லா ருடன்சேர்ந்தும் நானேன் துலங்கவில்லை
பொல்லா மனமேன் படியவில்லை-எல்லாரும்
உய்யவே மண்ணில் உலாவும் சதாசிவமே
பையவே என்னையும் பார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *