அமுதம் பிறந்த அதேநொடியில்- அட
 அவளும் பிறந்தாளாம்
உமையாள் மகிழும் அண்ணியென- அவள் 
உள்ளம் மலர்ந்தாளாம்
சுமைகள் அகற்றும் கருணையினாள்- நல்ல 
சுபிட்சம் தருவாளாம்
கமலந் தன்னில் அமர்ந்தபடி- நம்
 கவலைகள் களைவாளாம்
 மாதவன் முகுந்தன் மணிமார்பில்- எங்கள் 
மலர்மகள் அமர்வாளாம்
கோதை ஒருத்தி குடிசையிலே- தங்கக்
கனிகளைப் பொழிந்தாளாம்
ஆதி சங்கரர் தோத்திரத்தில்- அவள்
 அகமிக மகிழ்ந்தாளாம்
பாதம் பதிக்கும் கருணையினால்- நல்ல 
பயிர்கள் வளர்ப்பாளாம்
உண்ணும் உணவில்அவளிருப்பாள்- நல்ல
 உறைவிடம் தருவாளாம்
எண்ணும் காரியம் ஈடேற -அவள்
 என்றும் அருள்வாளாம்
வண்ணப் பட்டாடை தனம் பெருக-அவள்
 வரங்கள் தருவாளாம்
கண்ணில் நிறையும் பேரழகி -மனம் 
கசிந்தால் கனிவாளாம்
பாலைத் திருடிய கண்ணனுக்கு- அவள்
 பாற்கடல் தந்தாளாம்
காலைவருடிக் காதல்செய்து -அந்தக்
 காரிகை மகிழ்ந்தாளாம்
வேலை சாடும் விழிமலர்ந்தே -அவள் 
வினைகள் களைவாளாம்
கோலங்கள் காட்டும் திருமகளே- நமை
 கடைக்கண் பார்ப்பாளாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *