இறையடியாரின் இயல்பு இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது.
சிவசிந்தையில் தம்மையே பறிகொடுத்தவர்கள் பற்றிய வர்ணனை
திருவாசகத்தில் பல இடங்களில் காணப்படுகிற ஒன்றுதான்.அடியவர்
தனியே இருக்கையில் என்னுடைய இறைவனென்று சொல்லி மகிழ்வதும்,
அடியார் திருக்கூட்டத்தின் நடுவே இருக்கையில் ‘நம்பெருமான்’என்பதும்
இயற்கை.

முதல்நிலை உரிமை பற்றிய நிலை.இரண்டாம் நிலை,உறவு பற்றிய நிலை.
தனிமையிலும் தொண்டர் குழாத்திலும் மாறி மாறி இறைவன் பெருமையையே
வாய் ஓயாமல் பேசுகிற இயல்பு கொண்ட இப்பெண்,ஒவ்வொரு முறை இறைவன்
திருநாமத்தை சொல்லும் போதும்,அவள் கண்களில் நீர் பெருகிய வண்ணம் இருக்கும்.

இதில் என்ன அழகென்றால்,ஒருமுறை நாமம் சொன்னதும் கண்கள் பெருக்கெடுக்க,
அடுத்த நாமத்தை உச்சரிக்கும் முன்னமே அந்த நாமத்தின் சிறப்பினை நினைந்து கண்கள்
பனிக்கின்றன.இந்த பூமியில் இருக்கும் நினைவே இருப்பதில்லை. மூலப் பரம்பொருள்
மீதே பக்தி மூண்டு விட்டதால்,விண்ணவரை,சிறு தெய்வங்களை,பணிவதில்லை.

இதில் யாரைப் புகழ்வதென்று ஒரு கணம் தோழியர் மலைக்கிறார்கள்.இப்படி
எல்லையில்லா பத்திமை பூண்டபெண்ணைப் புகழ்வதா? அல்லது, இவ்வாறு
தன்மேல் ஈடுபடும் விதமாய் கருணை கனிந்த கடவுளாகிய கண்ணுதற் பெருமான்
கழலிணைகளைப் புகழ்வதா?

இப்பெருமைகளை வாயாரப்பாடி அழகிய பூக்கள் நிறைந்த புனலில் நீராடுவோம் என்கின்றனர்.

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *