தோழிகளிடையே ஆன உரையாடல் என்னும் எல்லை கடந்து சிந்திக்கும் போத,திருவெம்பாவையின் சூட்சுமப் பரிமாணங்கள் பலவும் புரிபடுகின்றன.
“நாளை எங்களை எழுப்புவேன் என நேற்று சொல்லிச் சென்ற தோழியசின்னும் விடியவில்லையா?நாணமேயின்றி அச்சொல் எந்தத் திசையில் தொலைந்ததுவோ?

வானம் நிலம் மற்றும் உளவெல்லாம் அறிவதற்கு அரியவனாகிய சிவன் தாமாக வந்தெம்மை ஆட்கொள்ளும் சீர்கழல்களைப் போற்றி வரும் எங்களுக்குன் வாசல் திறக்க மாட்டாயா?ஊனுருக மாட்டாயா?
உனக்குரிய எமக்கும் பிறர்க்குமாகிய தலைவனை பாடுவாயாக” என்பது திரண்ட பொருள்.

இதில் “உன் வாக்கு நாணமின்றித் தொலைந்த திசை எது”வென்று கேட்டவர்கள், சிவனை வானகமோ வையகமோ பிற திசைகளோ அறியாத நிலையைச் சுட்டுகிறார்கள். ஆனால் இந்தத் தோழியாகிய குருவின் சொல் போன திசையே சிவன்வரும்திசை. சிவனின் அருள் இருந்தால் மட்டுமே குருவானவர் வந்திருந்து சிவதீட்சை வழங்குவார்.

அவருடைய சொல் போன திசையே சிவன் தாமாக வரும் திசை.அதற்கான வழியைத் திறக்க தோழியர்களாகிய அடியார்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

“ஊனே உருகாய்-உனக்கே உறும்” என்ற வரியை “ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனை” என சேர்த்துப் படித்தால்கூனக்குரிய சீடர்களாகிய எங்களுக்கும் பிறருக்கும் தலைவரான சிவன் எனும் பொருள் பெறப்படுகிறது.

குருவின் அருள் பெற்றால் சிவனருள் தாமே வெளிப்படும் என்பது இதன் பொருள் என்னும் கோணத்திலும் இப்பாடலை அணுகலாம்.
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *