சின்னச் சின்ன தோல்விகளை

சொல்லித் திரிவேன் நானாக

“என்ன?எப்போ?”என்றபடி

எதிரிகள் எல்லாம் கதை கேட்பார்

இன்னும் கொஞ்சம் சுவைசேர்த்து

இட்டுக் கட்டிப் பரப்பிடுவேன்

தன்னை மறந்த மகிழ்ச்சியிலே

தாமும் கதைசொல்லப் புறப்படுவார்

“சேதி தெரியுமா” என்றவரும்

சேர்த்துப் பரப்பிய கதையெல்லாம்

காதில் வந்து விழும்முன்னே

களத்தில் இறங்கி நடந்திருப்பேன்

மீதி வெற்றிகள் எதையும்நான்

மறந்தும் வெளியே சொல்வதில்லை

நீதி இதிலே உண்டென நான்

நீட்டி முழக்கவும் போவதில்லை

நம்மைப் பற்றிப் பேசுபவர்

நாக்குச் சுகத்தில் நின்றிடுவார்

இம்மி அளவும் அடுத்த அடி

எடுத்து வைக்கவும் போவதில்லை

கும்மி அடிப்பவர் அடிக்கட்டுமே

குறிக்கோள் நோக்கி நாம் நடப்போம்

சும்மா அவலைக் கொடுத்துவிட்டு

சுவைமிகும் வெற்றியில்நாம்திளைப்போம்

மற்றவர் முதுகை முகர்பவர்கள்

மலரா மனதுடன் உழல்பவர்கள்

வெற்றுப் பேச்சில் லயிப்பவர்கள்

வளரப் போவதும் கிடையாது

குற்றம் சொல்லி அவர்களைநாம்

குத்திக் காட்டி என்னபயன்?

வெற்றியை நோக்கி நம்பயணம்;

வேடிக்கை மனிதர்கள் எதிர்ப்படலாம்

யாரோ தேய்த்த எடைக்கல்லா
இமய மலையை எடைபோடும்?

யாரோ சொல்லும் பழிச்சொல்லா
இங்குன் பாதையில் தடைபோடும்?
ஊரோடு ஒத்துப் போகாதார்
உலகே தனதென சொல்லட்டுமே
வீரா துணிந்து நடைபோடு
வரலாறு உன்பேர் எழுதட்டுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *