புவனங்கள் எல்லாமே சிவசந்நிதி
பிரபஞ்சங்கள் முழுமைக்கும் அவனேகதி
தவறென்றும் சரியென்றும் சுழலும்விதி
சுடர்வீசும் மலர்ப்பாதம் சரணாகதி

அன்பேதான் சிவமென்று சிலர்பாடுவார்
அழிப்பேதான் தொழிலென்று சிலர்கூறுவார்
கண்மூன்று கொண்டானை யார்காணுவார்
கண்மூடி அமர்ந்தோரே சிவம்பேணுவார்

அடங்காத இருளோடு அவன்ராஜ்ஜியம்
அலைபாயும் மனதோடும் அவன்நாடகம்
ஒடுங்காத வரைதானே நவகாவியம்
ஒடுக்கத்தில் அசைவில்லா உயிரோவியம்

சங்கீதம் எல்லாமும் சிவன்பாடலே
சங்காரம் உயிர்ப்பெல்லாம் அவனாடலே
ஓங்காரப் பெண்ணோடு அவன் கூடலே
நீங்காத துணையிங்கு அவன்நீழலே

சித்தர்க்கும் முத்தர்க்கும் நெறிசொன்னவன்
பித்தேறும்  நரிதன்னைப் பரியென்றவன்
வித்தோடு உயிராகி விளைவானவன்
அத்தா என்றழுவார்க்கு அருளானவன்

நிலவுக்கு சடைமீது குடில்தந்தவன்
அரவுக்கு உடலெங்கும் இடம்தந்தவன்
கடல்தந்த நஞ்சுக்கும் கதிதந்தவன்
தமிழ்தந்த அம்மைக்குப் பதம்தந்தவன்

வானோடு ஒளியாகி இருளாகினான்
ஊனோடு உணர்வாகி உயிராகினான்
தேனோடு நிறமாகி சுவையாகினான்
தீயோடு காடேகி நடமாடினான்

துயர்மூடும் மருளுக்கு விடிவானவன்
உயிர்போகும் பாதைக்கு முடிவானவன்
உயர்வுக்கும் தாழ்வுக்கும் நடுவானவன்
கயிலாயன் அருளாளன் கருணாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *