அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினாலும் கவிஞர் சமய உணர்வுகளுக்கு  அப்பாற்பட்டவர் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.திருக்குரானை தமிழில் மொழிபெயர்க்க அவர் முற்பட்டார். அது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்ததும் அப்பணியை நிறுத்திக் கொண்டதோடு இசுலாமிய சகோதரர்களுக்கு வருத்தம் தெரிவித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டார். எனினும் இஸ்லாம் தமிழில் எனும் பிளாக் கவிஞர் மொழிபெயர்த்த முதல்பகுதியை  வெளியிட்டு  மகிழ்ந்துள்ளது.
திறப்பு
எல்லையிலா அருளாளன்இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டுஆரம்பம் செய்கின்றேன்.
* * *
உலகமெலாம் காக்கின்றஉயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்சொந்தமென நிற்பவனாம்;
அவன் அருளாளன்;அன்புடையோன்;
நீதித் திருநாளின்நிலையான பெருந்தலைவன்;
உன்னையே நாங்கள்உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையேஓயாமல் கோருகிறோம்;
நேரான பாதையிலேநீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி யார்மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலேஅடியவரை நடத்தி விடு!
எவர்மீது உன் கோபம்எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறிஇடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டுஅடியவரைக் காத்து விடு!”
திருமறையின் தோற்றுவாயாகிய அல்ஃபாத்திஹா என்னும் பகுதியை கவிஞர் மொழிபெயர்த்திருந்த விதம் இது.
திருச்சியில் உள்ள கலைக்காவிரி நிறுவனம் மேற்கொண்ட முயற்சி காரணமாக கவிஞர் ஏசு காவியம் படைத்தார்.திருக்குற்றாலத்தில் கவிஞரைத் தங்கவைத்து ஒருவர் விவிலிய வரிகளை வாசிக்க,மற்றொருவர் விளக்க கவிஞர் வரிகளை உடனே சொல்வாராம்.ஏசு காவியம் எனக்கு அறிமுகமானதும் கவிஞர் மறைந்த போதுதான்.ஏசு காவியத்தின் எண்சீர் விருத்தமொன்றை வெளியிட்டது இதயம் பேசுகிறது இதழ்.ஏசு கடைசியாகத் தனது சீடர்களுக்குச் சொன்னது,கவிஞரே தனது சீடர்களுக்குச் சொன்னதுபோல் உள்ளது
என்ற குறிப்புடன் வெளியான வரிகள் இவை;
அன்புடைய குழந்தைகளே உங்களோடும்அதிகநாள் நானிருக்க மாட்டேன் பின்பு
பொன்பொழியும் என்தந்தை இடத்துச் செல்வேன்போனபின்னர் நீங்களெல்லாம் என்னைப் போல
அன்புடைமை மிக்கோராய் வாழ்தல் வேண்டும்ஆன புதுக் கட்டளையை ஏற்றல் வேண்டும்
மன்பதையோர் இதிலிருந்து நீவீர் எந்தன்மகத்தான சீடரென அறிதல் வேண்டும்
இந்தக் கவிதையைப் படித்த பிறகே ஏசு காவியம் புத்தகத்தை வாங்கினேன். மாணவர் பதிப்பு ஒன்றையும் கலைக்காவிரி வெளியிட்டிருந்தது.
ஏசுநாதர் அவதாரம் செய்யுமிடத்தில் அருமையான தாலாட்டுப் பாடலை கவிஞர் எழுதியிருந்தார்.

வானளந்த திருக்குமரா!மனிதகுல மருத்துவனே!
தேனளந்த திருவாயில் சித்திரங்கள் தீட்டவந்தாய்!
மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம்
ஆநிரைக் கொட்டிலுக்கு யார்கொடுத்தார் எங்கோவே!
தச்சனுக்குப் பிள்ளையென்றும் தாயொருத்தி கன்னியென்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனது திருக்குமரா
போன்ற வரிகள் இப்போது நினைவிலிருக்கின்றனஏசுவை மேய்ப்பனென்றும் மனிதர்களை ஆடுகளென்றும் சொல்லும் வழக்கம் கிறித்துவத்தில் உண்டு. மக்களை ஆடுகள் என்று சொல்வதற்கு முற்றிலும் புதிய காரணமொன்றை கவிஞர் ஏசுகாவியத்தில் குறிப்பிட்டிருந்தார். ஒரு மரத்தின் இலைகளை உண்ணும் ஆடுகள், அந்த மரம் வெட்டப்பட்டால் அழுவதில்லை. அடுத்த மரம் தேடி ஓடும்.ஏசு தண்டிக்கப்பட்ட போது மக்கள் அப்படித்தான்  நடந்து  கொண்டார்களாம். கவிஞர் சொல்கிறார்….
“ஆடு நிகர்த்தவர் மக்களே-இலை ஆடிய பக்கத்தில் ஓடுவார்;முன்பு
நாடிய மன்னனைப் போற்றிய வாயில் நாலு மொழிகளும் பேசுவார்-உடல்
கூடு விழுந்தபின் யானையை கொசு கொத்திக் கடிப்பது போலவே-துன்பக்
கோடு விழுந்தவர் மேனியில் புதுக் கொள்கையையும் மக்கள் தீட்டுவார்

 ஏசு காவியத்தின் பல இடங்கள் வாசிப்பவர்களை உருக்கிவிடும்.ஏசுவின் கைகளில் சிலுவையைத் தூக்கிவைத்த காட்சியை வர்ணிக்கும் போது ,

தொட்டதெல்லாம் பொன்னாகும் வள்ளலிடம் சென்று ஒரு தொழுநோய்க்காரன்
விட்டெறிந்த பணம்போல ஏசுபிரான் கைகளிலே வீரர் எல்லாம்
எட்டுப்பேர் சுமக்கின்ற பெருஞ்சிலுவை தனையாங்கே எடுத்து வைத்தார்
கட்டளைபோல் பெருவானம் கலக்கமுற ஓர்மின்னல் கண்டதம்மா
என்றெழுதினார் கவிஞர். உலகில் உள்ளவர் பாவங்களை  சுமப்பவரிடம்  கொடுத்த சிலுவை, வள்ளலிடம் விட்டெறிந்த பணம் போன்றது என்று புதிய உவமை படைத்தார் கவிஞர். சிலுவையில் ஏசுவை அறைகிற போது உடலில் ஆணிகளை அடிக்கும் காட்சியைக் கவிஞர் வர்ணிக்கிறார்.
“அக்கிரமம் வென்றதென ஓராணி கைகளிலே அறைந்து வைத்தார்
மக்களினம் தோற்றதென மறு ஆணி கால்களிலே அடித்து வைத்தார்”
“நாயகனை சிலுவையிலே சாய்த்தார்கள் ஆணிகளை நன்றாய்த் தட்டி
காயங்கள் யாவினுக்கும் குழந்தைகளைக் கொடுத்தார்கள்”
என்பன போன்ற ஏராளமான இடங்கள் உருக்கமானவை.
காவியத்தில் முக்கியமான இடங்களில் கவிஞன் உள்ளே நுழைந்து தன் கருத்தைச் சொல்வதற்கு கவிக்கூற்று என்று பெயர்.பாஞ்சாலி சபதத்தில் பாரதியின் குரலைப் பல்வேறு இடங்களில் கேட்கலாம்.அதேபோல ஏசுவை சிலுவையில் அறைகிற இடத்தில் கவிஞர் நுழைந்து ஒரு கேள்வி கேட்கிறார்
வஞ்சகர்கள் வாழுவதும் மதுக்குளத்தில் நீந்துவதும் வாழ்க்கையெல்லாம்
பஞ்சணையில் தூங்குவதும் பால்பழங்கள் அருந்துவதும் பண்பு மிக்கோர்
வெஞ்சிலுவை ஏறுவதும் வெங்கொடுமை காணுவதும் பண்பாடென்றால்
நஞ்சிருக்கும் பாத்திரமே நல்லவரின் பாத்திரமோ அறியோம் நாமே !
சிலுவையில் அறையப்பட்ட மகனை மேரிமாதா காண்கிற இடம் .குழந்தைப் பருவத்தில் பார்த்த மகனை மறுபடியும் அன்னை பார்க்கிறாள்

பதினாலாம் நால்நிலவை,பால்நிலவை,தன்வயிற்றுப் பனியை தேனை

புதனொடும் வியாழனொடும் பொருந்துகிற மதியழகை பூப்போல் கண்ணை
மதலையிலே பார்த்திருந்த மரியாளாம் மாதா இவ்வடிவம் பார்த்தாள்
என்று சொன்ன கவிஞர்,திருக்குறளை மிகச்சரியான இடத்தில் கையாள்கிறார்.
ஈன்றெடுத்த போதினிலே பெரிதுவக்கும் தன்மகனை இந்த நேரம்
ஊன்றிவைத்த சிலுவையுடன் பார்ப்பதற்கோ திருமாதா உயிர்படைத்தாள்
 என்னும் இடம் கண்களில் கடலை வரவழைக்கும். ஏசுநாதர் சிலுவையில் மரிக்கிற போதும் உணர்ச்சிப் பிழம்பாகிறார் கவிஞர்.
“பூவிருந்த பொன்மரங்கள் போய்விழுந்து பட்டன பூமிதன்னை வானகத்து மீனினங்கள் தொட்டன “
தாயிருக்கப் பிள்ளை சாகும் சங்கடங்கள் கொஞ்சமோ!சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ!” 
“ஓதுகின்ற வேதநூலில் உள்ளவாறு மீட்பரின் பாதமோடு எலும்புஅங்கு பங்கமாக வில்லைகாண்
ஆதவனின் விலாப்புறத்தில் குத்திநோக்குவாரெனஆதிநூலில் உள்ளவாறு யாவுமாகிவிட்டதே “.
ஏசு காவியத்தை கவிஞர் நிறைவு செய்கிற இடமும் அபாரமானது.
மண்ணிடை ஏசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து தேவைநித்தியமே!
விண்ணரசமையும் உலகம் முழுதும்-இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே..ஏசுவை நம்புவமே!
என்று அவர்களின் நம்பிக்கைக்கு அரண்சேர்ப்பார்.
தத்துவம் ஏதும் விட்டுவிட்டிருந்தால் தயவுடன் பொறுத்தருளும் என்றும்  கேட்டுக் கொள்வார் .
வாழிய சூசை;வாழிய மரியாள்;வாழிய ஏசுபிரான்
ஆழ்தமிழாலே அவன்புகழ்சொன்னேன் துன்பங்கள் சேரவிடான்
என்று நம்பிக்கை தெரிவிப்பார்.
கவிஞர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் துணைவியார் திருமதி வள்ளியம்மை கண்ணதாசன் கோவையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஏசுகாவியம் உருவானபோது குற்றாலத்தில் கூடவே இருந்தவர் அவர்.கவிஞர் கடைசியாய் சிகாகோவில் மருத்துவமனையில்  இரு கைகளிலும் குழாய்கள் பொருத்தப்பட்டு  படுத்துக்  கிடந்த  கோலம், ஏசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவூட்டியதாக அந்தக் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்
தான் படைத்த இறவாக்காவியம் என்று ஏசு காவியத்தை அவர் சொன்னார். அதேநேரம், தான் பிறந்து வளர்ந்து பின்பற்றும் இந்து மதத்திற்கு இப்படியொரு காவியம் எழுத வேண்டுமென்ற எண்ணம் அவரை உந்தியது. அதன் விளைவாக அவர் எழுதத் தொடங்கியதுதான்…..சங்கர காவியம்!!
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *