கண்ணதாசன் மறைவுக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில்,”கண்ணதாசனின் வரிகளுக்கு இதுவரை காணாத பொருள்களையெல்லாம் அவருடைய ரசிகர்கள் காண்பார்கள் “என்று பேசினாராம் ஜெயகாந்தன்.உண்மைதான்.கவிஞரின் வரிகளுக்கு புதிய நயங்களையும் விளக்கங்களையும் தேடித் தேடிச் சொல்லத்தஒடங்கியவர்கள் பலர்.அவர்களில் நானும் ஒருவன்.

“கூடிவரும் மேகமெனக் கூந்தலைத் தொட்டார்-
குவளை போல மலர்ந்ததென்று கண்களைத் தொட்டார்-தொட்டால்
ஒடியுமென்று இடையைமட்டும் தொடாமலே விட்டார்”
என்ற பாடலை
சொல்லிவிட்டு,”இதில் கவிஞர் எவ்வளவு நயமாக ஒரு விஷயம் வைத்திருக்கிறார் தெரியுமா?’
என்று நிறுத்துவேன்.
“மேகத்தை கூந்தலுக்கு உவமை சொன்னார் .கண்களுக்கு குவளை மலர்களை உவமை
சொன்னார்.ஆனால் .இடை தொட்டால் ஒடியுமென்று தொடாமலே விட்டார் என்று பாடியவர்,இடைக்கு ஓர் உவமை கூட சொல்லவில்லை.ஏன்தெரியுமா? அது மெல்லிய இடை.
மிக மெல்லிய இடை.அதை உவமையால்தொட்டால் கூட ஒடிந்துவிடும் என்பதால் தான் கவிஞர் உவமை சொல்லக்கூட இல்லை”.என்றதும் கண்ணதாச பக்தர்கள் ஆனந்த பாஷ்பம் சொரிவார்கள்.
இவையெல்லாம் மாலைநேர மன்ற சந்திப்புகளில் அரங்கேறும் விவாதங்கள்.

ராஜ்நாராயண் என்ற வடநாட்டுத்தலைவர் பிரதமராக வேண்டும் என்று ஜனதாவில் ரகளை செய்து கொண்டிருந்த நேரம்.ஆள் தாடியும் மீசையும் தலைப்பாகையுமாய் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.”இந்தாளை கேலி செய்து கவிஞர் பாடியிருக்கார் தெரியுமா?” என்றொரு புதிரை அவிழ்த்துவிடுவார் ரவி.”என்ன பாட்டுங்க அது?” என்றதும்,”தப்புத் தாளங்கள்-வழி தவறிய பாதங்கள்”என்ற பாடலைப் பாடிவிட்டு,”பாராளும் கோலங்கள் பரதேசி வேஷங்கள்” என்ற வரிகளை விரல் அபிநயத்துடன் பாடிக்காட்டுவார் ரவி.

இதற்கிடையே கண்ணதாசன் மன்ற வளர்ச்சிநிதிக்கான நாடக ஏற்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கின.பிச்சைக்காரியைப் பணக்கார இளைஞன் காதலிப்பதாகக் கதை.இதில் லூஸ்மோகன்
சில காட்சிகளில் தோன்றுவதாக அமைத்திருந்தார்கள்.

உள்ளூரிலேயே நாடக ஆசிரியர் ஒருவரை ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.அவர் எடுத்த எடுப்பிலேயே “உங்களுக்கு நல்ல நேரம்” என்றார்.”என்னை எழுதச் சொன்னா எந்த நாடகமும் சக்ஸஸ்தான்.ஆனா எனக்கு தண்ணி வாங்கிக் கொடுத்து கட்டுப்படியாகாது.உங்க நல்ல நேரம் இப்ப நான் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கேன்.அதனாலே மதியம் சாப்பாடு வாங்கிக் கொடுத்தா போதும்”.அவரை தினம் நாடக ரிகர்சலுக்கு அழைத்துப் போவதும்,வாணிவிலாஸில் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதும் என்னுடைய பொறுப்பு.(செந்தில் உணவு விடுதி அசைவ உணவகம் என்பதால் விரதக்காரர் அங்கே வரமாட்டாராம்).

என் வகுப்புத் தோழன் விஜயானந்த் வீட்டு மாடியில்தான் ரிகர்சல்.பழையூரில் சின்ன உணவுக்கடை வைத்திருந்த ஒருவர்தான் ஹீரோ.கறுப்பாக இருந்தாலும் களையான முகம்.ஆனால் அவர் ஹீரோவாக ஒப்பந்தமாக முக்கியக் காரணம்,நாடக செலவில் பெரும்பகுதியை அவர் தருவதாக ஒப்புக் கொண்டிருந்ததுதான்.பக்கத்தில் எங்கிருந்தோ ஹீரோயின் ரிகர்சலுக்கு வந்த போது பார்த்தேன்.ஹீரோவின் அழகை எல்லோரும் பாராட்டும் படியாக இருந்தார் ஹீரோயின்.

இதற்கிடையே நான் ஊடல்கொள்ளும் விதமாய் ஒரு சம்பவம் நடந்தது.ஹீரோ ஹீரோயின்
முதலிரவுக் காட்சிக்கான பாடல் ஒன்றை சத்தியநாராயணன் எழுதிவிட்டார்.
“இரவு நேரம் உறவுக்காலம்
இளமை தேகம் துடிக்கும் நேரம்” என்பது அந்தப் பாடலின் பல்லவி.
அவர் அய்யர் வீட்டுப் பையன்.சொற்ப சம்பளத்தில் எங்கேயோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் எல்லா கலைகளிலும் கைவைப்பார்.ஒருமுறை எங்கள் வீட்டுக்கு அவர் வந்த போது அடுத்த நாள் ஆயுள் ஹோம பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.எங்கள் பூர்வீக ஊரான திருக்கடையூரிலிருந்து குருக்கள்கள் வந்திருந்தார்கள்.”மாமா மாமா “என்று அவர்களுடன் அந்நியோன்னியமான சத்தியநாராயணன்,அடுத்த நாள் அதிகாலையில் பஞ்சகச்சத்தோடு வீட்டுக்கு வந்துவிட்டார்.மந்திரம் சொல்வதிலிருந்து பூஜைப் பொருட்கள் எடுத்துத் தருவது வரை அவர்களுக்கு வெகு ஒத்தாசையாய் இருந்தார்.

அதுவரை,அந்தக் குழுவிலேயே எல்லாம் வல்ல கவிஞனாக என்னை நிலைநிறுத்திக் கொள்ள படாத பாடு பட்டுக் கொண்டிருந்தேன்.கண்ணதாசன் கவியரங்கில் சொதப்பியதை ஈடுசெய்ய நினைத்திருந்த என் கனவில் இடிபோல் இறங்கியது,சத்தியநாராயணன் பாடல் எழுதிவிட்ட செய்தி.மிதமாக என் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தேன்.”பள்ளிக்கூடப் பையன்தானே!
சமாளித்துவிடலாம் என்று நினைத்திருப்பார்கள்போல! ஆனால் முடியவில்லை.பிறகு ஒர் ஒப்பந்தம் உருவானது.கதாநாயகியான அந்தப் பிச்சைக்காரி,சந்தோஷமாகப் பாடிப் பிச்சையெடுப்பதுதான் ஒபனிங் ஷாட்.
“சுகம்தரப் புறப்படும் பாடல்
சுமைதரும் துயருடன் ஊடல்!
மகிழ்வென்னும் போதை மனம்காணும்போதே
நிலவோடுதான் உறவாடுமே”
என்று தொடங்கும் பாடலை எழுதிக் கொடுத்தேன்.ஒரு பிச்சைக்காரி இப்படிப் பாடுவாளா என்று யாருமே கேட்கவில்லை.பாடலை எழுதிக்
கொண்டுபோகும்போது மறக்காமல் வெற்றிலை பாக்கெல்லாம் போட்டுக் கொண்டு போனேன்.

ரிகர்சல் மும்முரமாக நடந்தது.ஜனவரி 1ம்தேதி நாடகம்.நாடகத்தின் பெயர் “மை டியர் மாமா’.கோவை வானொலி நிலைய உதவி இயக்குநர் விஜய திருவேங்கடம்,அன்னபூர்ணா உரிமையாளர் கே.தோமோதரசாமி நாயுடு,ஆடிட்டர் சி.ஜி.வெங்கட்ரமணன் அகியோர் சிறப்பு விருந்தினர்கள். ஜனவரி 1ம் தேதி காலை கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார் லூஸ் மோகன்…தனியாக அல்ல.”சிஸ்டரோடு”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *