பீளமேடு, தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.கண்ணதாசன் பேரவையிலிருந்த பலரும் தொழிலாளர்களே.அவர்கள் வாழ்க்கைமுறை எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று.ஹாஃப் நைட்,ஃபுல் நைட் என்றெல்லாம் பலதும் சொல்வார்கள்.சிங்கை முத்து,பேரவைக்காக அறை ஒன்றைக் கொடுத்திருந்தார்.அதுவரை பைந்தமிழ் அச்சகத்தில்தான் பேரவை நண்பர்கள் கூடுவார்கள்.நான் வாரம் ஒருமுறையாவது அங்கே செல்வதுண்டு.
காலையில் மில்லுக்குப் போகும்முன் காளிதாஸ் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேரவைக்கு வருவார்.அவர் வருகிற போது பேரவை நண்பர்கள் யாரும் இல்லாவிட்டால்
பிரச்சினையில்லை”பொட்டாட்டம்” மில்லுக்குப் போவார்.பேரவை உறுப்பினர் ஒருவரைப்பார்த்தாலும் காளிதாசுக்குள் கண்ணதாசன் இறங்கி விடுவார்.கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலைமாடசாமி எதிர்ப்படுபவரை அறைகிற கதைதான்.
“ஒரு பாட்லீங்க ராஜேந்திரன்..” என்று தொடங்கினால் ராஜேந்திரன்,காளிதாஸ்,இருவருமே அன்றைக்கு லீவுதான்.தினசரி சந்திப்புகள்,வாராந்திர இலக்கிய அமர்வுகள் ஆண்டுக்கொரு விழா என்று உற்சாகமாக இயங்கியது பேரவை.
இதற்கிடையே கோவை சசி அட்வர்டைசிங் உரிமையாளர் திரு.சுவாமிநாதன் வாழ்வில் ஓர் அசம்பாவிதம் நடந்தது.கோவையில் ஏழாம் வகுப்பு வரை ஏ.எல்.ஜி. மெட்ரிகுலேஷன் பள்ளியிலும்.எட்டாம் வகுப்பிலிருந்து மணிமேல்நிலைப்பள்லியிலும் படித்தேன்.மணி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்,பி.வி.பத்மநாபன் என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர்களில் ஒருவர்.நான் படிப்பில் வெகுசுமார் என்றும் அவருக்குத் தெரியும்.கவிதைகள் எழுதுவேன் என்றும் தெரியும்.இவை இரண்டுமே என் பலங்கள் என்று அவர் நினைத்தார்…என்னைப் போலவே!
மற்ற ஆசிரியர்களிடம்,”விடுங்க சார்! நூறு மார்க் எல்லாரும்தான் வாங்கறான்.இவனுக்கு மரத்தைப் பார்த்தா வித்தியாசமாத் தோணுது,பறவையைப் பார்த்தா பேசனும்னு தோணுது” என்று பரிந்து பேசுவார்.

நான் முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் படித்தபோது,அவர் ஓய்வு பெறுவதாகவும்,அவருக்கான வழியனுப்பு நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க வேண்டுமென்றும் பள்ளியிலிருந்து அழைத்திருந்தார்கள்.மணிமேல்நிலைப்பள்ளி
முன்னாள் மாணவர் சங்கம் அந்த விழாவை நடத்தியது.

பத்மநாபன் நல்ல கல்வியாளர்.சுவாரசியமான மனிதர்.சிறந்த ஆசிரியர்களுக்கு தண்டிக்கத் தெரியாது என்பது அவர் விஷயத்திலும் உண்மையானது.ஆனால் தலைமையாசிரியராக இருந்ததால் அவர் தண்டிக்க வேண்டியிருந்த நேரங்கள்,அவருக்குத் தரப்பட்ட தண்டனைகளாகவே இருந்தன.நல்ல உயரம்.கண்ணாடிக்குள் தெரியும் போலீஸ் கண்கள்.மழிக்கப்பட்ட முகம்.தலைமையாசிரியர்களின் தலையாய இலக்கணமாகிய வழுக்கை.

சரளமாகப் பேச வரும்.திட்டும்போது மட்டும் தடுமாறுவார்.ஒரு வாக்கியத்தைத் தொடங்கும் போதும்,வாக்கியத்தை முடிக்கும் போதும்,வாக்கியத்தின் நடுவிலும் தோராயமாக ஐந்தாறு பழமொழிகள் சொல்வார்.

இங்கே ஒருஃபிளாஷ் பேக்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது,எங்கள் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரும்,பள்ளித் தாளாளருமான
திரு,சின்னசாமி நாயுடு இறந்திருந்தார்.நான் அவருக்கு ஓர் இரங்கல் கவிதை எழுதியிருந்தேன்.
“விடிவெள்ளி விடைபெற்றுச் சென்றதோ-இனி
வாழுங்கள் என்வழியில் என்றதோ
அடிவேரும் அடியோடு சரிந்ததோ
அரியதொரு சரித்திரமே முடிந்ததோ”
என்று தொடங்கிய அந்தக் கவிதையை என் தமிழாசிரியர் க.மீ.வெங்கடேசனிடம்
காட்ட,அவர் தலைமையாசிரியரிடம் காட்ட,ஓவிய ஆசிரியர் தண்டபாணியைக் கொண்டு
அந்தக் கவிதையை ஒரு கறுப்பு சார்ட்டில் வெள்ளை வண்ணத்தில் தீட்டி,கூடவே சின்னசாமி நாயுடுவின் உருவத்தையும் வரைந்து பள்ளியில் பெரிதாக மாட்டி வைத்தார்கள்.அன்று நடந்த இரங்கல் கூட்டத்தில்,பள்ளி அறங்காவலர்,திரு.ஜி.கே.சுந்தரம்,தலைமையாசிரியர் பத்மநாபன் ஆகியோர் பேசியபிறகு நான் அந்தக் கவிதையை வாசித்தேன்.

அந்தக்கூட்டம் முடிந்து கீழே வந்ததும் எல்லோரும் பாராட்ட,12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அம்பலவாணன் மட்டும் காதுக்கருகே வந்து,”யார் எழுதிக் கொடுத்தாங்க” என்று ரகசியமாக விசாரித்தான்.செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பது போல எனக்கு புகழையும் புதுவாழ்க்கைக்கான திறவுகோலையும், செத்தும் கொடுத்தார் சின்னச்சாமி என்பது எனக்கு அப்போது தெரியாது.

இந்த சம்பவத்தால் பத்மநாபன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான மாணவனாக ஆகியிருந்தேன்.”விளையும் பயிர் முளையில் தெரியும்”என்ற பழமொழியை அவர் அடிக்கடி என்மேல் பிரயோகித்து வந்தார்.
அவருக்கான வழியனுப்பு விழாவை நான் தொகுத்து வழங்கியதும்,முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான சசி அட்வர்டைசிங் சுவாமிநாதன்,தன்னுடைய விசிட்டிங்கார்டை என்னிடம் தந்து,”நாளைக்கு வந்து எங்க ஆபீஸ்லே ஜாய்ன் பண்ணிக்கங்க” என்றார்.
“சார்! நான் படிச்சுகிட்டிருக்கேன் சார்!” என்றதும்,”பரவாயில்லை!சாயங்காலத்திலே ரெண்டு மணிநேரம் வந்தீங்கன்னா போதும்” என்றார்.

எனக்கிருந்த விளையாட்டுப்புத்தியில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு.”இன்னைக்கு ஆபீசுக்கு வாங்களேன்” என்றார்.
சென்றேன்.அப்போதே நவீனமாக இருந்தது அலுவலகம்.வரவேற்பறையில் காத்திருந்தேன் மிக அழகான
தட்டச்சிகள் இருந்தனர்..
“எந்திரத்தில் உள்ள எழுத்தாய்ப் பிறந்திருந்தால்
வந்தென்னைத் தீண்டும் விரல்”
என்று மனசுக்குள் எழுதிக்கொண்டிருந்தபோது உள்ளே போகச் சொன்னார்கள்.
உற்சாகமாக வரவேற்றார் சுவாமிநாதன்.பேசிக்கொண்டிருந்தபோதே
காபி வந்தது.அலுவலக மேலாளர் சங்கரிடம் சொல்லி எனக்கான பணிநியமன உத்தரவைத் தயார் செய்யச் சொன்னார்.தினமும் மாலை 4-6 வேலை நேரம்.சங்கர் தயார் செய்த பணிநியமன உத்தரவில் மாதச் சம்பளம் 500/ என்றிருந்தது.சுவாமிநாதன் அதை அடித்து விட்டு 750/ என்று திருத்தினார்.1990ல் தினம் இரண்டுமணிநேரம்
வந்து போக 750/ரூபாய் என்பது என் ஆசையையும் தூண்டியது.வேலையில் சேர்ந்தேன்.ஆறே மாதங்களில் சம்பளத்தை 1250ரூபாய்களாக உயர்த்தினார்.

பாரதிதாசன் நூற்றாண்டுவிழாவிற்கு சசி விளம்பர நிறுவனம் வாயிலாக பாரதிதாசனின் வாசகங்கள்
அடங்கிய ஸ்டிக்கர்கள் வெளியிடச் செய்தேன்.பாவேந்தர் நூற்றாண்டு விழாவையும் நடத்தினோம்.சசி
விளம்பர நிறுவனம் சார்பாக நாங்கள் நடத்திய அடுத்த விழா என்னவென்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள்…. ஆமாம்! கண்ணதாசன் விழாதான்!!

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *