அர்த்தமில்லாத சோகம் உன்னை
அடிக்கடி சுற்றிக் கொள்கிறதா?
தொட்டதற்கெல்லாம் கோபம் வந்து
திடுமென்று சுடுசொல் விழுகிறதா?

உற்றவர் மத்தியில் இருக்கும் போதும்
உன்னிடம் மௌனம் படிகிறதா?
நெற்றி பாரமாய் நெஞ்சில் குழப்பமாய்
நித்தம் பொழுது விடிகிறதா?

கற்பனை பயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொள்முதல் செய்தால் இப்படித்தான்!
அற்ப விஷயங்கள் எதற்கும் நீயாய்
அலட்டிக் கொண்டால் இப்படித்தான்!

தீர்க்க இயலாச் சிக்கல்கள் எதுவும்
இந்த உலகத்தில் என்றுமில்லை!
பார்க்கப் பெரிதாய் தெரியும் விஷயம்
பக்கத்தில் போனால் ஒன்றுமில்லை!

சுருங்கிய முகத்தில் சிரிப்பை மலர்த்து
சுறுசுறுப்பாக எழுந்துவிடு
விரிந்தது உலகம்! விரிந்தது வாழ்க்கை
வருவது வரட்டும் துணிந்து விடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *