அடிப்படையில் சேக்கிழார் அமைச்சராக இருந்தவர். ஆட்சி பொறுப்பின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர். பெரிய புராணத்தில் புகழ்ச்சோழர் போன்ற அரசர்கள் காணப்படுகின்றனர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட நாயன்மார்கள் பெரிய புராணத்தில் பேசப்படுகின்றனர்.

காவியத்தை எழுதிச்செல்கிறபோதே ஆட்சிப்பொறுப்பின் நுட்பங்களை, நிர்வாகவியல் நுணுக்கங்களை இடம்பெறச் செய்வது சேக்கிழாரின் தனித்த சிறப்புகளில் ஒன்று.

எறிபத்தநாயனார் புராணங்களில் அத்தகைய நுட்பங்களை நாம் காண முடியும். சிவகாமி ஆண்டார் என்ற முதிர்ந்த சிவனடியார் தினமும் இறைவனுக்குரிய மலர்களைக் கொய்து பூசனைக்குக் கொண்டு செல்லும் பழக்கம் உடையவர்.

தினமும் விடியற்காலையில் அவர் எழுந்து நீராடி தன் மூச்சுக்காற்றோ நாவினுடைய எச்சிலோ மலர்களில் பட்டுவிடக் கூடாது என்று வாயையும் கட்டிக் கொண்டு நெடுங்காலம் மலர் பறிப்பதில் இருக்கிற அனுபவம் காரணமாக சிறிது நேரத்தில் மலரக்கூடிய அரும்புகளை தன் விரல்கள் வழியே தொட்டறிந்து அவற்றை இறைவனுக்குரிய பூசனை மலர்களாகக் கொய்து கொண்டு செல்வார்.

விடியற்காலையில் சிவகாமி ஆண்டார் விழித்தெழுவது எப்படி என்பதைப் பற்றிக்கூட அருமையான ஒரு பதிவினை சேக்கிழார் விளக்குகிறார்.

“வைகறை உணர்ந்து போந்து புனல்மூழ்கி வாயும் கட்டி
கையினால் தெரிந்து நல்ல கமழ்முகை அலரும் வேளை
தெய்வ நாயகர்க்குச் சாத்தும் திருப்பள்ளி தாமும்
கொய்து” வருகிறாராம் சிவகாமி ஆண்டார்.

விடியற்காலையை நம்மில் பலர் கண்டதில்லை. அதிகாலையில் எழ வேண்டும் என்றால் எழுப்புவதற்காக அலாரம் வைத்துவிட்டு அலாரம் அலறும் போது அதன் தலையில் அடித்து அலாரத்தை தூங்கச் செய்துவிட்டு தாமும் தூங்குகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் சிவகாமி ஆண்டாருடைய நிலை என்னவென்றால் விடியப் போவதாக தானாக உணர்ந்து எழுந்து கொள்கிறார்.

‘வைகறை உணர்ந்து போந்து’ இந்த நவீன உலகில் பலரும் விடியற்காலையில் எழுந்து நடைப்பழக்கம் மேற்கொள்வது என்று தீர்மானம் செய்வார்கள். அதிகாலையில் அவர்களால் எழ மட்டும் முடியாது.

ஆனால் ஒருநாள் துவங்கப்போகிறதை அறிந்து தாமாக எழுகிற அளவு உள்ளுணர்வை சிவகாமி ஆண்டார் கூர்மையாக வைத்திருந்தார் என்பது சேக்கிழார் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

மரபின் மைந்தன் ம.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *