(நான்கைந்து நாட்களுக்கு முன் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் அழைத்தனர். ஆதியோகியாம் சிவனின் முரண் இயல்புகளை வர்ணிக்கும் பாடலடொன்றை எழுதித் தரக் கேட்டனர். திருமதி ஜெயஶ்ரீ அவர்கள் மஹாசிவராத்திரியில் இசைத்த அந்தப் பாடல்…இதுதான்)

இருளோடு ஜோதி… ஒளிவீசும் நீதி
எழில்மங்கை பாதி… இவன் ஆதியோகி

நடமாட சுடலை.. பொடிபூசும் மேனி
உடனாட கணங்கள்… இவன் ஆதிஞானி

சடையோடு புனலாம்… கரமேந்தும் அனலாம்

சிரம்மீது நிலவாம்… விழிமூன்றும் வெய்யிலாம்

பொன்போல மேனி …திருநீல கண்டம்
பொன்கூரை வீடு …கையில்திரு ஓடு

விண்ணோரும் தேடி… அடையாத பாதம்
எண்தோள்கள் வீசி… நடமாடும் கோலம்

நெற்றிக்கண் திறப்பான்… காமனை எரிப்பான்
வெற்றிவடி  வேலன்… கண்வழியே பிறப்பான்

பருவங்கள் எல்லாம்… சிவன்பார்க்க மாறும்
துருவங்கள் எல்லாம்…. ஒன்றாக சேரும்

வேதங்கள் தேடி…. உணராத சித்தன்
ஓடோடி வந்து …அருள்செய்யும் பித்தன்

யானைத்தோல் போர்த்து…. புலித்தோலை உடுப்பான்
திகம்பரன்  ஆகி ….திசையெங்கும் நடப்பான்

சிலநேரம் அகோரன் ….அதிரூப சுந்த்ரன்
அதிகாரம் செய்யும்… இவன்கால காலன்

கைலாச வாசி… ப்ரபஞ்ச யாத்ரி

மஹாயோகி ஆளும்… மஹாஷிவ ராத்ரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *