சின்னஞ் சிறியவளை-ஒளிச்
சுடராய்த் தெரிபவளை
பென்னம் பெரியவனின்-இடப்
பாகம் அமர்பவளை
மின்னல் கொடியழகை-உண்ணா
முலையாம் வடிவழகை
உன்னும் பொழுதிலெலாம்-அவள்
உள்ளே மலருகிறாள்

கன்னங் கரியவளை-அருட்
கனலாய் ஒளிர்பவளை
இன்னும் புதியவளை-கண்கள்
இமையா திருப்பவளை
பொன்னில் பூணெழுதும்-முலை
பொலியும் பேரருளை
என்னென்று காணவந்தேன்-அவள்
என்னில் நிறைந்து நின்றாள்

மூலக் கனலினுள்ளே-புது
மோகம் வளர்ப்பவளாம்
காலக் கணக்குகளை-ஒரு
கணத்தில் எரிப்பவளாம்
சோலைப் புதுமலராம்-அவள்
ஜோதித் திருவடிவாம்
மேலென்ன சொல்லுவதோ-உண்ணா
முலையாள் மகிமையெல்லாம்

அண்ணா மலைத்தலமே -எங்கள்
அன்னையின் இருப்பிடமாம்
பண்ணார் கலைகளுக்கோ-அவள்
பாதங்கள் பிறபிடமாம்
பெண்ணாள் நிகழ்த்துவதே-இந்தப்
பிரபஞ்சப் பெருங்கனவாம்
எண்ணா திருப்பவர்க்கும்-அவள்
எதிர்வந்து தோன்றிடுவாள்

உயிர்களின் இச்சையெலாம்-எங்கள்
உத்தமி படைத்த நலம்
பயிர்களின் பச்சையெலாம்-எங்கள்
பைரவிகொடுத்த நிறம்
துயரங்கள் இன்பங்களும்-அவள்
திருவுளம் வைத்த விதம்
முயல்தவம் அத்தனையும்-உண்ணா
முலையாள் கருணையடா

எத்தனை ஞானியரோ-அவள்
எதிர்வந்து தொழுதிருப்பார்
பித்தனை உணர்ந்தவரும்-இந்தப்
பிச்சிமுன் அழுதிருப்பார்
வித்தென விழுந்தவளாம்-விளை
வினைகள் அறுப்பவளாம்
முத்தியைக் கொடுப்பவளாம்-உண்ணா
முலையம்மை தாள்பணிவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *