காடு திருத்திய மானிடர்கள்-ஒரு
காலத்தில் நாடுகள் அமைத்தளித்தார்
வீடுகள் வீதிகள் சமைத்தவரோ-பல
வாழ்க்கை முறைகளும் வகுத்தளித்தார்
தேடும் வசதிகள் பெருகியபின்-நல்ல
தேசங்கள் வளர்ந்து பொலிகையிலே
ஏடு புகழ்ந்திட சிங்கையினை-புகழ்
ஏற்றி வளர்த்தார் லீகுவான் இயூ

புத்தம் புதிய குடியரசின் -வெகு
புகழ்முகம் இவரெனும் வரலாறு
நித்தம் அதிசயத் திட்டங்கள்-தரும்
நிகரில் வல்லமை பலவாறு
தத்தம் கடமைகள் புரிந்தாலே-ஒரு
தேசம் துலங்கும் என்பதற்கு
வித்தக சான்றாய் விளங்குகிறார்-இந்த
வையம் புகழும் லீகுவான் இயூ

அடிப்படை வசதிகள் பெருக்குவதில்-பல
அறிவியல் நன்மைகள் புதுக்குவதில்
படிப்படியாய் நலம் செதுக்குவதில்-நிதி
பார்த்துப் பார்த்து ஒதுக்குவதில்
குடிமகன் கடமை உணரும்படி-நெஞ்சில்
கனவுகள் விதைத்துப் பெருக்குவதில்
நடையில் நின்றுயர் நாயகனாய்-இன்று
நிமிர்ந்து நிற்பவர்லீகுவான் இயூ

எங்கள் மகாகவி பாரதிதான் -அன்று
எழுதிய கவிதை ஏட்டினிலே
இங்கு வானகம் தென்படுக-என
எழில்நிலை சிங்கை நாட்டினிலே
பொங்கும் புகழ்நிலை எட்டியவர்-நலம்
பொலிந்து தொடுவார் தொண்ணூறு
தங்கக் கவிகண்ணதாசனின் சொல்-ஆயுள்
தொண்ணூறு என்றும் பதினாறு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *