புதியமுத்தூரிலிருந்து ஒருவர் என்னைச் சந்தித்தார். தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்ட விதமே அலாதியானது.”வணக்கம் சார்! என் பேரு கணேசன். தமிழாசிரியர். எங்க ஊர்லே பெரிய ஆளுங்ககிட்டே நன்கொடைகள் வாங்கி, எலக்கிய விழாக்கள் விடாம நடத்தறேன். எங்கூர்லே கூட கேப்பாங்க..உம்ம பேரு கணேசனா? டொனேசனான்னு”.

நன்கொடை வாங்கப் போகிறவர்கள் கையில் எலுமிச்சம்பழம் கொண்டு போவது வழக்கம். அதற்குக் காரணம் மரியாதை மட்டுமல்ல. அங்க இலக்கண சாஸ்திரமும் அதிலே இருக்கிறது. சந்திக்கப்படும் பெரிய மனிதர் எலுமிச்சம்பழத்தை கைநீட்டி வாங்கும்போது மணிக்கட்டின் உட்புறத்தில் மூன்று கோடுகள் இருந்தால் போன காரியம் பழம் என்று அர்த்தம்.தைரியமாக பத்தாயிரம் ரூபாய் ரசீது நோட்டைத் திறக்கலாம். கோடுகள் கம்மியாய் இருந்தால் எலுமிச்சம்பழம் நஷ்டம். துணிவிருந்தால் தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல, “அந்தப் பழத்தைக் கொஞ்சம் தரேளா”என்று வாங்கி வந்து விடலாம்.

நாம் எய்யும் அஸ்திரம் சரியான இடத்தைச் சேர்கிறதா என்று பார்ப்பது நன்கொடை வாங்கவே அவசியம் என்றால் விளம்பரத்தில் அதன் பங்கு மிக மிக முக்கியம். எந்த நுகர்வோரை மனதில் கொண்டு அந்தத் தயாரிப்பு சந்தைக்கு வருகிறதோ, அந்த நுகர்வோரின் வாழ்க்கை முறையை ஆராய்வதும், அவர்களுக்குப் பரிச்சயமான ஊடகங்களில் அவர்கள் மனதில் பதியும் விதமாக விளம்பரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இதற்கு மீடியா பிளானிங் என்று பெயர். இந்த ஊடகப்புரிதல் விளம்பர உலகில் பெரும் பங்கை வகிக்கிறது. பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரக் கட்டணம் 100% அதிகம். முதல் பக்கத்தில் வெளிவருவதால் மட்டுமே விளம்பரம் ஜெயிக்கும் என்று பொருளல்ல.

அதையும் தாண்டி ஊடகப் புரிதலில் எத்தனையோ அம்சங்கள் உண்டு. கயிலாய யாத்திரை விளம்பரத்தை கனாக்காணும் காலங்கள் தொடரில் போடுவதில் எந்தப் பயனும் இல்லை. அதேபோல தயாரிப்பின் மார்க்கெட்டிங் உத்திகளுடன் ஒத்துப் போகிற விதமாக விளம்பர உருவாக்கமும் மீடியா பிளானிங்கும் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்.

“ஃபிராஞ்ச் ஆயில் எங்கேப்பா” என்றொரு விளம்பரம் நினைவிருக்கிறதா? அவர்கள் துணிச்சலாய் ஒரு முடிவெடுத்தார்கள். சந்தைக்கு ஃபிராஞ்ச் ஆயில் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா ஊடகங்களிலும் விளம்பரங்களை வெளியிட்டு விட்டார்கள். நுகர்வோர்கள் கடை கடையாக ஏறி “ஃபிராஞ்ச் ஆயில் எங்கேப்பா” என்று அலைமோதினார்கள். கிடைக்கவில்லை என்றதும் விற்றுத் தீர்ந்ததாக நினைத்துக் கொண்டு இன்னும் தீவிரமாகத் தேடினார்கள். இரண்டு நாட்களில் சந்தைக்கு வந்ததும் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்தது.

எனவே விளம்பரங்கள் என்பவை வெற்றுக் கற்பனைகளின் விளையாட்டுக் கூடமல்ல. கள ஆய்வை வேராகக் கொண்டு வளரும் பணப்பயிர். படைப்பாக்கப் பிரிவு, வாடிக்கையாளர் சேவைப்பிரிவு ஊடகப் பிரிவு என்று விளம்பர நிறுவனத்தின் விரலுக்கேற்ற வீக்கங்கள் பல பிரிவுகளாக உண்டு.

இதில் ஊடகப் பிரிவு ஊடகங்களுடன் உறுதியான உறவை உருவாக்கிக் கொள்ளும். நாளிதழ்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பர சேகரிப்பாளர்கள் எல்லோருமே விளம்பர நிறுவனங்களின் ஊடகப்பிரிவு அலுவலர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். சிலசமயம் அந்த நெருக்கமே நெருக்கடி ஏற்படுத்திவிடும்.

உதாரணமாக, வாடிக்கையாளர்களை நாளிதழ்களின் விளம்பர அலுவலர்களும் சென்று பார்ப்பார்கள். சிறப்பிதழ் ஷாப்பிங் ஸ்பெஷல் என்று சில திட்டங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பினால், தங்களுடைய விளம்பர நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, விளம்பரம் வெளியிடச் சொல்வார்கள்.இதுதான் நடைமுறை.

ஒரு பிரபல விளம்பர நிறுவனத்திற்கு வாடிக்கையாளரின் அலுவலகத்தில் இருந்தபடியே நாளிதழின் விளம்பர அலுவலர் தொலைபேசியில் அழைத்தார். அந்த வாடிக்கையாளரின் பெயர் குப்புசாமி என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அந்த வாடிக்கையாளருக்கு சேவை செய்யும் அலுவலரிடம் பேசினார்.”அப்படியா! குப்புசாமி சார் கிட்டே பேசீட்டீங்களா? சார் அப்ரூவ் பண்ணீட்டா விளம்பரம் தயார் பண்ணிடலாம்” என்று பேசினார். பிறகு தொலைபேசி அழைப்பு விளம்பர நிறுவனத்தின் ஊடகப் பிரிவு அலுவலருக்கு மாற்றப்பட்டது.

அவர் உற்சாகமாக, “யோவ்! நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. அந்த குப்புசாமியை கோழி அமுக்கு அமுக்கி ஆர்டர் வாங்கீடு!” என்றார். அடுத்த விநாடியே அந்த விளம்பர ஆர்டர் ரத்து செய்யப்பட்டதுடன் அந்த விளம்பர நிறுவனத்துடனான தொடர்பையும் அந்த வாடிக்கையாளர் முறித்துக் கொண்டார்.

ஏனென்றால் குப்புசாமி எப்போது  எப்போது தொலைபேசியில் பேசினாலும் ஸ்பீக்கரில் போட்டுத்தான் பேசுவார். அவருடைய தொலைபேசியிலிருந்து தான் நாளிதழின் விளம்பர அலுவலர் அழைத்திருக்கிறார். தொலைபேசி ஸ்பீக்கர் ஆன்னாகி இருக்கும் விஷயம், அவரை விடாமல் சந்தித்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் சேவை அலுவலருக்குத் தெரியும். எனவே மரியாதையாகப் பேசி தப்பித்துக் கொண்டார். அந்த வாடிக்கையாளரை சந்தித்தே இராத ஊடகப் பிரிவு அலுவலர் விபரம் தெரியாமல் விளையாட்டாகப் பேசி மாட்டிக் கொண்டார்.

நானறிந்த விளம்பர நிறுவன அதிபர் ஒருவரின் இயல்பு என் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு வாடிக்கையாளரை சந்திக்கப் போனால், அந்த வாடிக்கையாளருக்குத் தருகிற அதே மரியாதையை அங்கிருக்கும் ஒவ்வோர் அலுவலருக்கும் தருவார். குறிப்பாக டெலிபோன் ஆபரேட்டரை சந்தித்து நலம் விசாரித்து நட்புடன் பேசி பிறகுதான் நகர்வார். காரணம் கேட்டால், “சார்! கிளையண்ட் நம்மை கூப்பிடச் சொல்லி அபரேட்டர் கிட்டே சொல்வார். அவங்களுக்கு நம்மை பிடிக்காட்டி என்ன வேணும்னாலும் சொல்லீட முடியும்! கூப்பிட்டேன் – பிசியா இருக்கேன்னு சொல்லீட்டாரு, இப்ப வர முடியாதுன்னு சொல்லீட்டாருன்னு எது வேணும்னாலும் சொல்லி நம்ம உறவை வீணாக்க முடியும் சார்!’ என்பார்.

வாடிக்கையாளர்களுடனான உறவையும் ஊடகங்களுடனான உறவையும் பேணிக்காப்பதில் விளம்பர நிறுவனங்கள் எப்போதுமே விழிப்பாக இருக்கும்.

(தொடரும்)

Comments

  1. பிரமாதம் ஸார்..இது போல் தான் டூத் பேஸ்ட் விற்பனையை அதிகரிக்க ஒரு கம்பெனி அந்த டூத் பேஸ்ட் வாயை ஒரு இரண்டு மில்லி மீட்டர் DIA
    அதிகப் படுத்தி விற்பனையை கூட்டியது என்று சொல்வார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *