விளம்பரங்கள் எழுதுகிற வேலைக்கு காப்பி ரைட்டர் என்று பெயர். சினிமாவில் திரைக்கதை/காட்சி அமைப்பு/ வசனம் எழுதுவதை ஸ்க்ரிப்ட் என்று சொல்வதுபோல விளம்பரங்கள் எழுதுவதை காப்பி என்று சொல்கிறார்கள். பார்த்து எழுதுவது என்றும் படியெடுத்து எழுதுவது என்றும் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடியஅத்தனை அபாயங்களும் அந்தப் பெயருக்கு உண்டு. அவ்வளவு பெரிய நிறுவனத்தில் ஜெராக்ஸ் மெஷின் இல்லையா?அதற்கென்று ஆள் வைத்திருக்கிறார்களே என்று கவலையுடன் என்னைக் கேட்டவர்கள் உண்டு.

தினம் மாலை 4-6 வேலை நேரம்.மாதம் 750/ரூபாய் சம்பளம் என்றதும் எனக்கு அதில் ஆர்வம் வந்தது. சசியில் காப்பி ரைட்டிங் துறையில் என்னையும் சேர்த்து இருவர். இன்னொருவர்,அந்தத் துறையின் தலைவர்.சிராஜ் என்பது அவருடைய பெயர்.ஆங்கிலக் கவிஞர்.Squarring the circles என்ற தலைப்பில்ஒரு தொகுப்பு வெளியிட்டிருந்தார். விளம்பர உலகில் படைப்பாக்கப்பிரிவில் பல சலுகைகள் உண்டு. எந்த விதமாகவும் உடையணிந்து வரலாம் என்பது முதல் சலுகை. யாரையும் பெயர் சொல்லி அழைக்கலாம் என்பது இரண்டாவது சலுகை. படைப்பாக்கப் பிரிவில் வரைகலைக்கென்றொரு பகுதியும் எழுத்தாளர்களுக்கென்றொரு பகுதியும் இணைந்தே இருக்கும். வரைகலையாளர்கள் பிரிவு ஒரே புகை மண்டலமாக இருக்கும். சிராஜ் ஒரு ஜீன்ஸ் சந்நியாசி. எல்லாவற்றுக்கும் சிரித்துக்கொண்டு எதிலும் பட்டுக் கொள்ளாமல் விட்டேற்றியாக இருப்பார். காப்பி ரைட்டிங்கில்  எழுதப்படாத விதிமுறைகள் சில உண்டு. மனிதனின் தலை, உடல், கால் போல ஹெட்லைன், பாடிகாபி, பேஸ்லைன் என்று மூன்று முக்கியமான அங்கங்கள் உண்டு. விளம்பர வடிவமைப்புக்கென்று கணினிகள் பயன்பாட்டுக்கு வராத காலம் அது. விளம்பர வாசகங்கள் எழுதிக் கொடுத்தால், வெளியே கொண்டுபோய் டைப்செட்டிங் செய்து கொண்டு வருவார்கள். சசியிலேயே டார்க் ரூம் ஒன்று உண்டு.  அங்கே வரையப்பட்ட வடிவங்களையோ புகைப்படங்களையோ இணைத்து விளம்பரத்தை உருவாக்குவார்கள்.

அப்போதெல்லாம், வாடிக்கையாளர் பார்வைக்கென்று குத்து மதிப்பாக
உருவாக்கப்படும் வடிவமைப்புக்கு லே அவுட் என்று பெயர். டைப்செட்டிங் இருக்காது. வரைகலைகூட கோட்டோவியமாக இருக்கும். விளம்பர வாசகங்கள் தட்டச்சு செய்து அனுப்பப்படும். வாடிக்கையாளர் ஒப்புக் கொண்டபின் டைப்செட்டிங் செய்யப்படும். அதற்கு ஆர்ட்வொர்க் என்று பெயர் தட்டச்சு செய்யப்பட்ட தாளில் மெய்ப்பு பார்த்து, டைப்செட்டிங் செய்த ஆர்ட் வொர்க்கிலும் மெய்ப்பு பார்த்து அதன் பின்பக்கங்களில் கையொப்பம்இட வேண்டும். கேலியும் சிரிப்பும் கும்மாளமுமாய்  வேலைகள் நடப்பதைமற்ற பிரிவினர் பொறாமையுடன் பார்ப்பார்கள். விளம்பர நிறுவனத்தின்எல்லா அங்கங்களிலும் சுதந்திரம் உண்டென்றாலும் அதிகபட்ச சுதந்திரம்படைப்பாக்கப் பிரிவில்தான்.

லைன் இல்லஸ்ட்ரேஷன் எனப்படும் கோட்டோவியங்களில் ஞானவேலும்சுந்தரேசனும் கெட்டிக்காரர்கள். வாடிக்கையாளர்களை சந்தித்து விளம்பர ஒப்பந்தங்களைப் பெற்று வருபவர்களுக்கு அக்கவுண்ட் எக்ஸிக்யூடிவ்ஸ் என்று பெயர். பெரும்பாலான எக்ஸிக்யூடிவ்களின் கேலிச் சித்திரங்கள் இந்த இரண்டு ஓவியர்களின் கைவண்ணங்களில் உருவாகும். சசியில் நான் சேர்ந்த காலம் மிக அற்புதமான காலம். விளம்பர நிறுவனம் என்பது, தனிமனிதத் தொடர்புகளை அடித்தளமாகக் கொண்டுதான் கோவைபோன்ற நகரங்களில் உருவானது.ஆனால் எண்பதுகளின் இறுதியில் விளம்பரவியல் சிறப்புப் படிப்பு, எம்.பி.ஏ மார்க்கெட்டிங் படிப்பு போன்ற சிறப்பு தகுதி பெற்றவர்கள் விளம்பர உலகத்துக்குள் வந்து கொண்டிருந்தார்கள். இளம் வல்லுநர்கள் படைப்புதுறையிலும் மார்க்கெட்டிங் பிரிவிலும் தீயின் தீவிரத்தோடு செயல்படத் தொடங்கினார்கள்.

புதிய தலைமுறையின் கண்ணோட்டத்தை புன்னகையுடன் வரவேற்றதோடுஅவர்கள் வேகத்துக்கும் ஈடு கொடுத்த சசி அட்வர்டைசிங் திரு,சுவாமிநாதன் குறித்து இங்கே சொல்ல வேண்டும். பள்ளிப் படிப்பைத்தாண்டாதவர் அவர். சிந்தாமணி கூடுறவு அங்காடியில் எளிய ஊழியராகவாழ்வைத் தொடங்கியவர். அங்காடிக்கு வரும் பத்திரிகைக்காரர்களுடன் பழக்கத்தில்,விளம்பரம் சேகரித்துத் தருவதில் கிடைக்கக் கூடியவருமானம் பற்றி அறிந்து, தொடர்புகளை பலப்படுத்தி, பகுதிநேரமாய் அந்தப் பணியில் இறங்கி இந்தியாவின் பல பகுதிகள் கொண்டநிறுவனமாய் சசி அட்வர்டைசிங்கை உருவாக்கியவர்வர் அவர்.

திறமையாளர்களை அடையாளம் காண்பதுடன் அவர்களைத் திறம்பட வேலை வாங்குவதில் கைதேர்ந்தவர். சசி அட்வர்டைசிங்கில் பணிபுரிந்தபோது விளம்பரத் துறையின் நுணுக்கங்களை, அதன் தொழில்நுட்பம் ,மற்றும் தொழில்தர்மம் சார்ந்து முறையாகக் கற்றுக் கொண்டேனா என்ற கேள்வி யோசிக்கத் தூண்டுகிற ஒன்று. ஆனால்,விளம்பர உலகின் நடைமுறை யதார்த்தங்களை விளங்கிக் கொள்ளும் இடமாக சசி இருந்தது.

சர்வதேசப் புகழ்பெற்ற விளம்பர நிறுவனங்களாகிய லின்டாஸ்,ஹெச்.டி.ஏ. ஒகில்வி&மேதர்(ஓ&எம்) போன்றவை குறித்த சுவாரசியமான தகவல்களும் துணுக்குகளும் சசியில் அன்றாட உரையாடல்களில் இடம்பெற்றன. இன்னொருபுறம், உள்ளூர் யதார்த்தங்கள் செயல்முறைகளில் சமரசத்துக்குத் தூண்டின. ஸ்ட்ராடர்ஜி போன்ற மந்திரச்சொற்கள் புழங்கினவே தவிர மிகச்சில நிறுவனங்களே அத்தகைய அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்ட விளம்பரங்களுக்கு இடம்கொடுத்தன.

ஆனால் ஒரு நிறுவனம் வளர்வதற்கு வருமானம் அவசியம் என்கிற கணக்குக்கு முதலிடம் தரும்போது பல வித்தியாசமான/விசித்திரமான உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டன. கோவையில் முக்கியத் தொழிலதிபர்கள் மரணம்அடையும் போது பல நிறுவனங்களின் இரங்கல் விளம்பரங்கள் மூலம்லட்சக்கணக்கான ரூபாய்கள் மதிப்பில் வணிகம் நடக்கும். கால்பக்கம், அரைப்பக்கம், முழுப்பக்கம் என்று,தயார்நிலையில் இருக்கும் லே அவுட்டுகளை அஞ்சலி செலுத்திவிட்டு வருபவர்களிடம் காட்டி மரணவீட்டு வாசலிலேயே ஒப்புதல் பெற்று வெளியிடும் அளவு துரிதமாக செயல்பட்டார்கள்.

வேறொரு நிறுவன அதிபருக்கு அவர் நிறுவனத் திட்டங்கள் சார்ந்த விளம்பரங்களைக் கொண்டு போயிருந்தோம். அவருக்கு அதிலிருந்த புதுமையான அணுகுமுறை புரியவில்லை. சூழ்நிலையை சமாளிக்க சுந்தரேசன் விளம்பர டிசைன்களை மூடிவைத்துவிட்டு அவருக்குக் கைரேகை பார்க்கத் தொடங்கிவிட்டார்!! கொஞ்சம் நெருங்கி ,ரகசியமாக, “அய்யா! உங்களுக்கு பல அழகான பெண்களோட அன்பும் அபிமானமும் தானாக் கிடைக்குமே” என்று சுந்தரேசன் சொல்ல, நாங்கள் கொண்டு போயிருந்த டிசைன்கள் அப்ரூவ் ஆயின.எனக்குத் தெரிந்து, தான்
கைரேகை பார்க்கும் அத்தனை பேருக்குமே சுந்தரேசன் சொல்லும் பொதுப்பலன் அது.

(தொடரும்)

Comments

  1. த‌ங்க‌ள் அனுப‌வ‌ப் ப‌கிர்த‌ல்க‌ள், 'விள‌ம்ப‌ர‌ உல‌கில் இவ்வ‌ள‌வு விஷ‌ய‌ங்க‌ளிருக்கின்ற‌ன‌வா!!'என‌ விய‌ப்பேற்ப‌டுத்துகின்ற‌ன‌. சுந்த‌ரேச‌னின் ச‌ம‌யோசித‌ம் சிரிப்பேற்ப‌டுத்திய‌து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *