கானமெழுப்பிய பேரிகை ஒன்றினைக்

கட்டிலில் போட்டது யார்?அட

கட்டிலில் போட்டது யார்?

யானை உலுக்கிய ஆல மரமொன்றின்

வேரை அசைத்தது யார்?அட

வேதனை தந்ததும் யார்?

ஏறிய நெற்றியை மீறிய மீசையை

எங்கோ மறைத்தது யார்-அட

எங்கோ மறைத்தது யார்

கீறிய சூரியப் பிஞ்சின் சுடர்கொண்டு

ககனம் நிறைத்தது யார்-யுகக்

கதவை உடைத்தது யார்?

வந்த நெருப்பிடம் வாஞ்சை வளர்த்தவன்

வற்றிய மேனிதந்தான் -வாடி

வற்றிய மேனிதந்தான்

சொந்த நெருப்பினை செந்தமிழ் ஆக்கியே

ஜோதி வடிவுகொண்டான் -புது

நீதி பலவும்சொன்னான்

பாற்கடல் நக்கிய ராட்சசப் பூனையின்

பாட்டையில் கால்பதித்தான் -எங்கள்

பாரதி கால்பதித்தான்

ஏக்கம் வளர்த்தவன் ஏழு கடலையும்

ஏந்தி இதழ்பதித்தான் -அதில்

காளி ரசம் குடித்தான்

மேனியின் வீணையில் ஓடும் நரம்புகள்

மேதைமைப் பாட்டிசைக்கும்-அவன்

தாங்கிய கூடசைக்கும்

வானம் குலுங்கிட ஊனும் விதையவன்

ஊனில் ஒளிந்திருக்கும்-அதில்

ஊழி அதிர்ந்திருக்கும்

ஆண்டுகள் எத்தனை ஆயினும் பாரதி

ஆளுமை வியாபகமே-அவன்

ஆண்மையின் ஞாபகமே

நீண்டிடும் பாதையின் நிர்மல வெய்யிலாய்

நிற்கும் அவன்முகமே-அவன்

என்றும் நிரந்தரமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *