களிற்று வடிவே கலியின் முடிவே

கண்ணிறை அழகே சரணம்

ஒளிக்கும் ஒளியே ஓமெனும் ஒலியே

ஒப்பில் முதலே சரணம்

துளிர்க்கும் தருவில் தோன்றும் தளிரே

துணையே திருவே சரணம்

களிக்கும் மகவே கருணைக் கனலே

கணபதி  நாதா சரணம்

சந்தம் செழித்த செந்தமிழ் உகந்த

சந்தனப் பொலிவே சரணம்

தந்தம் ஒடித்த தயையே எங்கள்

தலைவிதி அழிப்பாய் சரணம்

விந்தை நிகழ்த்தும் வித்தக நலமே

வெற்றியின் தலைவா சரணம்

சிந்தை திருத்தி ஆலயமென்றால்

சரியென்று நுழைவோய் சரணம்

புரங்கள் எரிப்போன் ரதமே தடுக்கும்

புயவலி உடையோய் சரணம்

வரங்கள் அருளும் விநாயக மூர்த்தி

வண்ணத் திருவடி சரணம்

சுரங்கள் இசையும் சுகமே எங்கள்

சுந்தர வடிவே சரணம்

இருளை வழங்கும் எழிலார் ஒளியே

எங்கள் இறைவா சரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *