காலத்தின் மடிகூட சிம்மாசனம்-எங்கள்

கவிவேந்தன் கோலோச்சும் மயிலாசனம்

கோலங்கள் பலகாட்டும் அருட்காவியம்-அவன்

கருத்தினிலே வந்ததெல்லாம் கிருஷ்ணார்ப்பணம்

நீலவான் பரப்பிலவன் நாதம்வரும்-நம்

நெஞ்சோடு மருந்தாகப் பாடம் தரும்

தாலாட்டும் மடியாக தமிழின்சுகம்-இங்கு

தந்தவனை கைகூப்பும் எங்கள் இனம்

சிறுகூடல் பட்டிவிட்டு சிக்காகோவிலே-அவன்

சிறகுதனை விரித்ததுவும் இந்நாளிலே

மறுமாசு இல்லாத மனக்கோவிலே-வாணி

மலர்ப்பதங்கள் வைத்ததுவும் அவன் நாவிலே
நறும் பூக்கள் உறவாடும் வனமாகவே-இங்கு
நம்கண்ண தாசனும் விளையாடவே
குறும்பான ஞானியென நடமாடியே-சென்ற
கவிவாணன் புகழிங்கு நிலையாகவே!
என்னென்ன சந்தங்கள் தந்தானம்மா-அவன்
இசையென்னும் தேரேறி வந்தானம்மா
பொன்னென்று மண்மிசையே பொலிந்தானம்மா-பல
புதையல்கள் அவனள்ளித் தந்தானம்மா
கன்னங்கள் பலதொட்டுக் கலந்தானம்மா-மதுக்
கிண்ணத்தில் காயங்கள் மறந்தானம்மா
என்றென்றும் நிலையாக இருப்பானம்மா-அவன்
இல்லாமல் என்போன்றோர் இங்கேதம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *