காரணம் தெரியவில்லை..
அவன் காம்போதி வாசித்தான்

சுரங்களின் சுவடறியா..

கரங்களில் குழலேந்தி

இதுவரை தொட்டறியா

துளைகளில் விரல்தடவி

எவரும் கேட்டறியா

இதத்தில் இங்கிதத்தில்…

தவமியற்ற அமர்ந்தவுடன்
தேடிவந்த வரம்போல

காரணம் தெரியவில்லை…அவன்

காம்போதி வாசித்தான்

தொடுத்த பூக்களிடை

துலங்கும் கதம்பங்களை

எடுத்தெடுத்துக் கோர்க்கும்

இளம்விரல்கள் லாவகமாய்
அடுத்தடுத்த ராகத்தில்
அநாயசமாய் சஞ்சரித்து

சிலிர்த்த சபைநடுவே

சிங்காரக் கண்ணனைப்போல்..

மோகக் குழல்தடவி-அவன்

மோகனம் வாசித்தான்

ஒற்றை முலையாலே

ஊரெரித்தாள் கோபத்தை

முற்றத்தில் துகில்பற்ற

மூண்டெழுந்த சாபத்தை

பற்றவைத்த கனல்துண்டாய்

புயலுருட்டும் மூங்கிலிடை

நிற்கும் சினம்தெறிக்க

நின்றெரிக்கும் அமிலம்போல்

 அத்தனைபேர் அதிர்ந்திருக்க
அடாணா வாசித்தான்
குழல் இவனில் இசைகிறதா
குழல் இவனை இசைக்கிறதா
அழலெழும்பும் நினைவுகளே
அபூர்வசுரம் ஆகிறதா
மழைநடுவே வனமாக
மனோதர்மம் சிலிர்க்கிறதா
இழையிழையாய் தேன்பிலிற்றி
இனந்தெரியா லஹரியிலே
கடவுள்தந்த கனவைப்போல்
கல்யாணி வாசித்தான்
நேற்றுவரை இசைஞனில்லை
நிமிடமொன்றில் சித்தித்து
ஊற்றெடுக்கும் தேனிசையை
உளமுருகி உபாசித்து
காற்றாய் மிதக்கின்றான்
கண்கிறங்கி இசைக்கின்றான்
வேற்றாவி புகுந்ததுபோல்
விசித்திரமாய் ஒளிர்ந்தபடி..
ராக மாலிகையில்-அவன்
ராஜாங்கம் நடத்துகிறான்
இந்தக் கணம் பிறந்த
இவன் இசையில் லயித்தபடி
வந்த மனவிரிவின்
விசுவரூபம் பார்த்தபடி
அந்தர சக்கரங்கள்
அனைத்திலுமே கனலெழும்ப
உந்துகிற மௌனத்தில்
உள்முகமாய் தொலைந்தபின்னும்
சித்தன்போல் நெடுந்தொலைவில்
சஹானாவில் கரைகின்றான்
தேய்பிறையின் ஒலியிதுவோ
திசைமுடியும் ஓரிடமோ
வேய்குழலின் தொலைநாதம்
வேதத்தின் பூரணமோ
பாய்ந்துவந்த பேரருவி
போய்மறையும் சமுத்திரமோ
போயடைய முடியாத
பரம்பொருளோ?பூரணமோ?

காட்டாதன காட்டி
ககனமெங்கும் இசையூட்டி

கற்பூரப் புகைபோல
குழல்வழியே கரைகின்றான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *