எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…

சினிமா நடிகர்களுக்கு இருக்கும் செல்வாக்கு பற்றியும், அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞர்களுக்கும் தமிழிலக்கியத்திற்கும் உள்ள இடைவெளி பற்றியும் கவலையோடு பேசினார்கள்.

ஒருநாள் ஓய்வு. மறுநாள் தமிழகத்தின் மரபு சார்ந்த அம்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அரங்கில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாகிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸ் மாவட்டத்தில் நடத்திய “தமிழர் திருவிழா 2005”, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, குத்து விளக்கேற்றி, கண் கவரும் கலை நிகழ்ச்சிகளோடு துவங்கியது.

உரைவீச்சு, கருத்தரங்கள், விவாத மேடை, கவியரங்கம், கலந்துரையாடல் செம்மொழி – ஆய்வரங்கம், நடனம், இசை, நாடகம் என்று விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பற்றி எழுதத் தொடங்கினால் அது தனியரு புத்தகமாகிவிடும்.

டெக்ஸாஸ் மாநிலத்தில் இருக்கிற டல்லாஸ் மாநகரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிற தமிழர்கள் வந்து திரண்டிருந்தார்கள். அமெரிக்கத் தமிழர்களின் குழந்தைகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் மிக நேர்த்தியாக அமைந்திருந்தன.

பட்டுப் புடவைகளும், வெள்ளை வேஷ்டிகளும், மல்லிகைச் சரங்களுமாய் கல்யாண வீடு போல் கலகலப்பாய் இருந்தது.

மூன்று நாள் மாநாட்டின் நிறைவு அம்சமாக “ஊடகங்களில் தமிழ்” என்கிற தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. அறிவியல் தமிழறிஞர் அனந்த கிருஷ்ணன், இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் வெளிவரக் காரணமான அருட்தந்தை கேஸ்பர், கவிஞர் கனிமொழி, டாக்டர்.கு.ஞானசம்பந்தன், ஆகியோருடன் நானும் பேசிய அந்த நிறைவு அமர்வு சூடு கிளப்பியது.

அர்த்தமுள்ள விவாதங்கள் அரங்கேறின. ஐந்தாம் வகுப்பு வரையாவது தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி ஆதங்கத்துடன் கையெழுத்திட்டனர். அமெரிக்கத் தமிழர்கள்.

இது மாநாட்டு நிகழ்ச்சிகளின் சாரம். இனி அமெரிக்காவை வலம் வருவோம் வாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *