வெள்ளிச் செதில்கள் மின்னும் ஒருகயல்

வெள்ளப் பெருக்கில் திரிகிறது
துள்ளும் நதியின் அலைகள் நடுவே
தூண்டில் எங்கோ தெரிகிறது
கொள்ளை அழகில் மின்னும் பனியில்
கொஞ்சும் ஈரம் உலர்கிறது
வெள்ளைப் பனியை விசாரிக்கத்தான்
வெய்யில் மெல்ல வருகிறது
பொற்குடம் தன்னில் நிறையத் தானே
பசும்பால் அன்று பெருகியது
கள்குடம் நிறைத்து தீஞ்சுவை திரித்து
கடவுளின் நாடகம் தொடங்கியது
வேலன் திருவடி சேரத்தானே
வண்ணச் சிறுமலர் அரும்பியது
காலம் அதனைக் குரங்கின் கைகளில்
கொடுத்துப் பார்க்க விரும்பியது
அழகாய் வளர்ந்த சிறுகொடி முற்றி
 அடடா விறகாய் மாறுவதோ
எழுதா விதியை எழுதிய பின்னே
எவர்தான் அதனை மீறுவதோ
ஏற்றிய சுடரில் கூட்டிய திரியில்
என்றோ இருட்டு தொடங்கிடலாம்
காற்றின் கைகள் தீண்டும் வரையில்
காக்கும் கைகள் காத்திடலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *