துளை கொண்ட ஒருமூங்கில்
துயர்கொண்டா வாடும்?
துளிகூட வலியின்றித்
தேனாகப் பாடும்;
வலிகொண்டு வடுகொண்டு
வந்தோர்தான் யாரும்;
நலமுண்டு எனநம்பி
நன்னெஞ்சம் வாழும்!

பயம்கொண்டால் ஆகாயம்
பறவைக்கு பாரம்;
சுயம்கண்டால் அதுபாடும்
சுகமான ராகம்;
அயராதே; அலறாதே;
அச்சங்கள் போதும்;
உயரங்கள் தொடவேண்டும்
உன்பாதை நீளும்!

உடைகின்ற அச்சங்கள்
உன்வீரம் காக்கும்;
தடையென்ற எல்லாமே
தூளாக்கிக் காட்டும்;
படைகொண்டு வருகின்ற
பேராண்மைக் கூட்டம்
நடைகண்டு விசைகண்டு
நாடுன்னை வாழ்த்தும்!

ஊருக்கு முன்பாக
உன்திறமை காட்டு;
பேருக்கு முன்பாக
பட்டங்கள் கூட்டு;
வேருக்கு பலம்சேர்க்க
வேர்வைநீ ஊற்று;
யாருக்கும் அஞ்சாமல்
எழும் நீயே காற்று!

– மரபின்மைந்தன் முத்தையா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *