என் வீட்டுக்காரி தீவிரமான மாரியம்மன் பக்தை சார்!”
என்னைப்பார்க்காமல், டைமண்ட் ஹோட்டல் அறையிலிருந்த நிலைக்கண்ணாடியைப்
பார்த்தபடியே மெல்லிய குரலில் சொன்னார் நண்பர். நிலைக்கண்ணாடி மேசையில்
வைக்கப்பட்டிருந்த பையில்தான் அவருடைய மனைவியின் அஸ்தி இருந்தது.காசி
டைமண்ட் ஹோட்டலுக்கு அன்று மதிய விமானத்தில் தான் வந்து
இறங்கியிருந்தோம்.மறுநாள் காலை அஸ்தி கரைக்க ஏற்பாடாகியிருந்தது
காசிக்கு இவ்வளவு விரைவில் மீண்டும் போகக்கூடிய வாய்ப்பு நேருமென்று
எதிர்பார்க்கவில்லை.ஆனால் வருத்தம் கலந்த வாய்ப்பு.நண்பருக்கும் எனக்கும்
ஒரே நாளில் திருமணம் நடப்பதாக இருந்தது.அவருக்குக் கோவையில்-எனக்கு
மதுரையில்.இரு திருமணங்களிலும் கவிஞர் வைரமுத்து கலந்துகொள்ள
வேண்டியிருந்ததால் நான் என் திருமணத்தை ஒருநாள் ஒத்திப் போட்டேன்.
நண்பர் சொந்த மாமன் மகளை மணந்தார். சேலத்தில் பல இடங்களில் புகழ்பெற்ற
இனிப்பகம் நடத்தி வருபவர் அவர்.
2009 ஆகஸ்ட்டில்அவருடைய மனைவி கோவையில் அம்மா வீட்டிற்கு வந்த இடத்தில்
திடீர் மரணமடைந்தார்.காரியங்கள் முடிந்ததும் அஸ்தியைக் கரைக்க காசி செல்ல
விரும்பினார் நண்பர்.

“சேலம் கோட்டை மாரியம்மன் மேலே அவளுக்கு ரொம்ப பக்தி சார்.அவ
அங்கே இருந்த வரைக்கும் அந்த அம்பாள் பார்த்துக்கிட்டான்னு அவ ஃபிரண்ட்ஸ்
எல்லாம் நம்பறாங்க” நிலைக்கண்ணாடியில் தெரிந்த நண்பரின் முகத்தையே
மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தபெண்ணின் மரணம் நிகழ்ந்தது கூட சக்தி நர்ஸிங் ஹோமில்தான்.தன் இஷ்ட
தெய்வத்தின் மடியில்தான் கண்மூடியிருக்கிறார் என்று ஆறுதலாய் சொல்லத்
தோன்றியது.சொல்ல வேண்டாமென்றும் தோன்றியது.
“காசியிலே அஸ்தி கரைச்சா காசியிலேயே மரணமடைந்ததற்கு சமானம்.அந்த
அம்மாவுக்கு மறுபிறவி கிடையாது.”
கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் சொன்ன வார்த்தைகள் நண்பருக்கு ஆறுதலாக
இருந்தன.காசியில் வந்திறங்கிய கையோடு கனபாடிகளை சந்தித்தோம். பெரிய
இடத்துப் பரிந்துரையுடன் அவரைக் கோவையிலிருந்தே தொடர்பு கொண்டிருந்தோம்.
“காலமே ஏழரைக்கெல்லாம் வந்துடுங்கோ”என்று சொல்லியிருந்தார்
கனபடிகள்.அவருக்குப் பூர்வீகம் சுவாமிமலை.காசியில் அவர்,அவருடைய அண்ணா
மற்றும் வாரிசுகள் ஒரு வைதீக சாம்ராஜ்யமே நடத்துகிறார்கள்.

அவர் வீட்டு வரவேற்பறையில் உள்ள பெரிய புகைப்படத்தில் சிவாஜி கணேசன்
குடும்பத்துடன் கங்கைக்கரையில் அமர்ந்திருக்க கனபாடிகள்
பூஜை நடத்திக் கொண்டிருந்தார்.மற்ற புகைப்படங்களில்,சங்கர் தயாள் சர்மா,
முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கனபாடிகளுக்குப் பொன்னாடை
போர்த்திக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் சரியாக ஏழரைக்குப் போனபோது கனபாடிகள் வீட்டுத்திண்ணையில்
வீற்றிருக்க நாவிதர் சவரம் செய்து கொண்டிருந்தார்.பூஜைக்கான ஆயத்தங்கள்
செய்யப்பட்டிருந்தன.
கனபாடிகளின் அண்ணா பிள்ளை சிவக்குமார் தலைமையில் புரோகிதர்கள் தயாராக
இருந்தனர்.சிவக்குமார்,அமெரிக்காவில் உயர்பதவியில் இருந்தவர்.
இப்போது காசியில் பலரை உச்ச பதவிக்கு வழியனுப்பும் “காரியத்தில்”
இருக்கிறார்.

கங்கைக்கரையில் மணிகர்ணிகா காட் அருகே புரோகிதர்கள் காரியத்திற்கு
உட்கார்ந்தார்கள்.பெண்குரலொன்று மெல்லென்றொலிக்க திரும்பிப்பார்த்தேன்.
கன்னங்கறுத்த இளம்பெண் ஒருத்தி. மலர்களும் அகல்களும் அடங்கிய
கூடையை இடக்கரத்தால் இடையில் ஒடுக்கிக் கொண்டு அஸ்தி வைக்கப்பட்டிருந்த
பையை நோக்கி வலக்கையை நீட்டி புரோகிதர்களிடம் ஏதோ சொல்லிக்
கொண்டிருந்தாள். மெலிந்த தேகம். கண்கள் இரண்டும்
ஒளித்துண்டுகள்.முக்காடிட்டிருந்தாள்.கால்களில் செருப்பில்லை.அவள் குரலை
புரோகிதர்கள் பொருட்படுத்தவில்லை.கண்களைத் திருப்பிக் கொள்ள முடியாத
ஆகர்ஷம் அவளிடம் இருந்தது.

காரியம் முடியும் வரை அதே பகுதியில் உலவிக் கொண்டிருந்தாள்.சடங்குகளை
மேற்பார்வை பார்க்கும் தோரணை அவளிடம் இருந்தது.நண்பர் முதல்நாள் இரவு
சொன்ன விஷயம் என் நினைவுக்கு வந்தது.
“சேலம் கோட்டை மாரியம்மன் மேலே அவளுக்கு ரொம்ப பக்தி சார்.அவ
அங்கே இருந்த வரைக்கும் அந்த அம்பாள் பார்த்துக்கிட்டான்னு அவ ஃபிரண்ட்ஸ்
எல்லாம் நம்பறாங்க”
எனக்குள் மெல்லிய நடுக்கம் பரவியது.மனதுக்குள் அனிச்சையாய் மலர்ந்தன
வரிகள்:

கைகளிலே மலரேந்தி காளி வந்தாள்
கங்கைநதிக் கரையோரம் நீலி வந்தாள்
மைநிறத்துப் பேரழகி நேரில்வந்தாள்
மலரடிகள் நோகும்படி அருளவந்தாள்

ஓடமெல்லாம் ஓய்ந்திருந்த நதியோரம்
வேதமொழி முழங்குகிற கரையோரம்
தேகந்தனை இழந்தமகள் செல்லும்நேரம்
தேவதேவி அருகிருந்தாள் வெகுநேரம்

மங்கையிவள் வாழ்ந்திருந்த விதம்பார்த்து
கங்கையிலே அவள்கரையும் தினம்பார்த்து
எங்களன்னை நேரில்வந்தாள் இடம்பார்த்து
எங்குமவள் ஆகிநின்றாள் ஒளிபூத்து

காரியங்கள் முடிந்ததும் அந்தப்பையை கங்கையில் நனைத்து அந்தப் பெண்ணிடம்
கொடுத்தேன்.கூடவே நீட்டிய நூறு ரூபாய்த்தாளை அலட்சியமாக வாங்கிக்
கொண்டு,பையை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டு சிறு தலையசைப்போடு
நகர்ந்தாள் அவள்.

கலசத்தில் இருந்த ஒன்பதுவாசற் பையின் எச்சம் சிறிது நேரத்தில் கங்கையில்
கரைந்தது.எல்லாம் முடிந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *