புவனம் ஆள்பவள் ஈஸ்வரியாம்-அடப்

போடா அதனால் எனக்கென்ன

குவளைத் தண்ணீர் நான்கேட்டால்-அவள்

குடுகுடு எனவந்து நீட்டுகிறாள்

கவலை கொஞ்சம் படிந்தாலும்-அவள்

கைகளில் அள்ளித் தேற்றுகிறாள்

“துவள வேண்டாம் எப்போதும்-நல்ல

துணை நான்” என்று காட்டுகிறாள்

சாக்த நெறியாம் வழிபாடாம்-அந்த

சாத்திரமேதும் நானறியேன்

வேர்த்த நொடியினில் விசிறுகிறாள்- எந்த

விரதம் இருந்தினி நான்துதிப்பேன்?

“காத்திடல் என்பணி” என்றுரைக்கும்-அவள்

காருண்யம் நிறைந்தது; போதாதா?

பூத்திடும் புன்னகை ஒளிதந்தாள்- இனி

பொல்லா வினைகள் ஓடாதா

மேரு சக்கரம் தனிலெல்லாம் -பல
மேலோர் அவளை தருவிப்பார்
யாரும் அறியாக் கணங்களிலே -அவள்
என்மனக் குப்பையில் ஒளிந்திருப்பாள்
வேரும் நீரும் தானானாள்-இனி
விளைச்சலுக் கிங்கே என்ன குறை
பாரும் வானும் பதைபதைக்க -இங்கே
பகடை என்னுடன் உருட்டுகிறாள்
அடுப்பில் சமையல் பார்த்தபடி-பிள்ளை
அழுகையைஅமர்த்தும் கைகாரி
இடுப்பில் என்னைச் சுமந்தபடி -அட
எத்தனை லோகங்கள் ஆளுகிறாள்
முடிப்பாள் வினைகளை முற்றாக -அதை
முடிக்கும் வேலையும் எனக்கில்லை
கடப்பாள் என்கடல் படகாக-இனி
கடந்திட மற்றொரு கடலுமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *