புன்னை வனத்தொரு பூ மலர்ந்தால் -அதை
பிரபஞ்சம் எங்கோ பதிவுசெய்யும்
தன்னை உணர்ந்தோர் உயிர்மலர்ந்தால்-அதை
தெய்வங்கள் தேடி வணக்கம்செய்யும்
முன்னை வினைகளைக் கரைப்பதற்கும்-இனி
மேலும் மூளாதிருப்பதற்கும்
உன்னும் உயிரினில் அருள்சுடரும்-அதன்
உந்துதலால் தினம் நலம் நிகழும்
காலத்தின் கறைகள் கழுவவந்தோம்-செய்யும்
காரியம் துணைகொண்டு மலரவந்தோம்
மூலத்தின் மூலம் உணரவந்தோம்-நமை
மூடும் இருளினைத் தாண்டவந்தோம்
தூலத்தின் கூட்டினில் ஒளிப்பறவை-அதன்
தூக்கத்தைக் கலைத்திடும் கனவுகொண்டோம்
நீலத்தின் சுடரினில் நின்றுகொண்டு-வரும்
நேரக் கணக்குகள் கடக்கவந்தோம்
 தோணிகள் உலவிடும் நதியின்மிசை-சில
துடுப்புகள் கிடைக்கும் தொலைந்துவிடும்
பூணும் விருதுகள் பெருமைகளும்-சில
பொம்மைகள் போல்கையில் வந்துவிழும்
காணும் உயிர்கள் அனைத்திலுமே-அந்தக்
கடவுளின் சுவடுகள் காத்திருக்கும்
வீணாய் வளர்க்கும் பகைமையிலும்-இந்த
வாழ்வின் விசித்திரம் விளங்கிவிடும்
பெயரில் இருக்கும் பரவசமும்-அந்தப்
பெயரை வளர்க்கும் பெருவிருப்பும்
பெயரும் நாளொன்று வரும்பொழுதில்-மனம்
பெய்கிற மழைபோல் கரைந்துவிடும்
துயரும் மகிழ்வும் கற்பனையே-எனும்
துல்லிய உண்மை தெரிந்துவிடும்
மயங்கும் மதியின் வித்தையெல்லாம்-ஒளி
மலரடி பற்றிடத் தெளிந்துவிடும்

Comments

  1. கருமாரியை ரசித்ததைக் கடவுளின் சுவட்டிலே கருத்துரையாக்கிட்டேன்.கடவுளின் சுவடு அற்புதம்.கருமாரி அதி அற்புதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *