பிரிவு நேர்வதை உறுதி செய்கிற
விருந்து நமக்கும் ஒருநாள் நிகழலாம்.

சிற்றுண்டித் தட்டை ஸ்பூனால் கிளறி
வெற்றுப் பார்வையில் விநாடிகள் போகலாம்.
மௌனப் பாறைகள் மனதில் சுமந்து
கண்ணீர் மறைத்துக் கதைகள் பேசலாம்.
மேசை தள்ளி மெள்ள எழுகையில்
பேசும் வார்த்தைகள் பாதியில் நிற்கையில்
அடர்ந்த பிரியம் கவிழ்ந்த கணங்களின்
உக்கிரம் நமது உயிரைப் பிழியலாம்.
நிபந்தனையில்லாத நட்பின் அடர்த்தியை
நினைவுகளாக்கி நாம் விடைபெற நேரலாம்.
அன்பைத் தொலைத்த அகதியாய், மறுபடி
தளர்ந்த நடையிலென் பயணம் தொடரலாம்.
இருந்தபோதும் என் இனிய ஸ்நேகிதி, உன்
பாதையில் நான் கொஞ்சம் பூக்கள் வளர்த்ததாய், உன்
பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்… போதும்!

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *