ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக்கொள்கிறபோது, இளங்கோவனுக்கு செம்மலரையும் செம்மலருக்கு இளங்கோவனையும் அடையாளமே தெரியவில்லை. நீங்க இளங்கோவன் தானே, நீங்க செம்மலர் தானே என்கிறமாதிரி அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

உண்மையில் அந்தக்குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயே இறந்துபோய்விடுகிறது. அந்த விபரம் இளங்கோவனுக்குத் தெரியக்கூடாது என்று செம்மலர் சொல்லியிருக்கிறாள்.

இளங்கோவன் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே இருக்கிறான். இந்த இடத்தில் ஓர் அழகான பாத்திரத்தை இளஞ்சேரல் அறிமுகப்படுத்துகிறார். மூன்று பக்கங்கள் மட்டுமே வரக்கூடிய கதாபாத்திரம் அது.

இளங்கோவனுடைய மிக நெருங்கிய நண்பன். கடன் வாங்கி, மது அருந்திவிட்டு திரிகிற ஆளாக குணா மாறிவிடுகிறான். எல்லா இடத்திலும் மது அருந்திவிட்டு, பிரச்சினை செய்கிற ஆளாக இருக்கிற குணா, இளங்கோவன் சொன்னால் திருந்திவிடுவான் என்று குணாவினுடைய அப்பா நினைத்து அவனிடம் அழைத்துப்போகிறார்.

இளங்கோவன் சொன்னதும், சரி, நீ சொல்வதுபோல் செய்கிறேன். நாளையிலிருந்து நாளை நீ மறுபடியும் சொல்லாதமாதிரி பார்த்துக்கிறேன் என்று குணா சொல்கிறான். ஒருவனைத் திருத்திய மனநிறைவோடு இளங்கோவன் திரும்புகிறான். ஆனால் அடுத்த நாள், முதலாளியின் நெருக்கடி தாங்காமல் குணா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான்.

காரியங்கள் முடிந்து வீட்டுக்கு வருகிறபோது, ஏற்றியிருக்கிற விளக்குக்கு அருகில் குணாவின் மனைவியும் இரு குழந்தைகளும் படுத்திருக்கிறார்கள். குணாவின் மனைவி படுத்திருப்பதை, “காய்ந்து அணைந்துபோன திரியை எடுத்துப்போட்டது போல் படுத்திருந்தாள்” என்று எழுதியிருக்கிறார். போகிற போக்கில் சொல்கிற உவமைதான். ஆனால் அருமையான அழுத்தமான உவமை அது.

இடையில் இளங்கோவனுக்கு அடிக்கடி மயக்கம் வருகிறது. செம்மலரின் கல்யாணத்துக்குப் போனவன், மயக்கம் போட்டுவிழுகிறான். ஓர் அச்சகத்திற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தவன், அப்படியே மயக்கம் போட்டு விழுகிறான். ரமேஷையும் செம்மலரையும் கோவிலில் சந்திக்கிறபோதும் மயக்கம் போட்டு விழுகிறான். அவனுக்கு ஏதோ தலையில் பிரச்சினை.

ஆபரேஷன் செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. அதற்கான அறுவைச் சிகிச்சையும் நடக்கிறது.

குணாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பெரிய கூட்டம் நடக்கிறது. அப்போது, குணாவின் மனைவி செம்பாவை, இளங்கோவனுக்கு திருமணம் செய்வதாக உறுதிப்படுத்துகிறார்கள் கட்சியினர். சி.ஆரிடம் ஒரு கேள்வி கேட்பான் இளங்கோவன். “என்ன தோழர், கடைசி வரைக்கும் என்னை சித்திரவதை பண்ணீட்டுத்தான் இருப்பீங்களா”என்று. ஆனால் அவர்களது திருமண வாழ்வைப் பற்றி விரிவாக எழுதவில்லை.

செம்மலரும் ரமேஷ¨ம் முதியோர் இல்லம் தொடங்குகிறார்கள். இல்லத் திறப்புவிழாவில் இளங்கோவன் வருகைக்காக காத்திருப்பார்கள். முதியோர் இல்லம் தொடங்குகிறபோது, ரமேஷ், செம்மலர் தம்பதி, இளங்கோவனை தங்களுடைய மகனாக தத்தெடுத்துக்கொள்வதாக ஓர் அறிவிப்பு செய்கிறார்கள். அது கதையின் முக்கியமான இடம். இளங்கோவன் பார்த்துக்கொண்டேயிருக்கிறான்.

எங்கள் மூன்று பேருக்குள்ளும் இருக்கிற சங்கடத்தை, முடிச்சை அவிழ்ப்பதற்கான ஒரே வழி இதுதான் என்கிறார்கள்.

கட்சியின் மூத்த தலைவர், இது எனக்குத் தெரியாது. நான் திக்பிரமை பிடிச்சமாதிரி உட்கார்ந்திருக்கிறேன். ஆனால் இதை நான் வரவேற்கிறேன் என்கிறார்.

இதுபோல் அவர்களின் வாழ்க்கை, அனிதாவின் மரணம் வரைக்கும் நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஓர் இயக்கத்தில் தீவிரமாக இருக்கிற ஓர் இளைஞனுக்கு கட்சியின் ஏற்ற இறக்கங்கள், மார்க்சிய இயக்கத்தின் மீது வெளிப்படையான விமர்சனங்களை வைக்கிறான் இளங்கோவன்.

“இப்போ நம் கட்சியிலும் ஜாதி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. காசு பார்க்க ஆரம்பிச்சாட்டாங்க. கல்யாணம் பண்ணி வைக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்று இளங்கோவன் சொல்கிறான். இது திராவிட இயக்கங்கள் உட்பட எல்லா இயக்கங்களிலும் இருக்கிறது.

பொது வாழ்க்கை நோக்கிப் போன ஓர் இளைஞன், வாழ்வின் பலவிதமான அலைக் கழிப்புகளின் மத்தியிலும் உறுதியோடு இருந்து, அதுபோல வாழ்க்கை கொண்டுவந்து போடுகிற எல்லா மாற்றங்களையும் நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு வாழ்கிறவனாக, பொதுவாழ்க்கையும் இயக்கமும் அந்த இளைஞனைப் பண்படுத்தியிருக்கிறது என்பது இந்த நாவல் முடிவில் நமக்குத் தோன்றக்கூடிய உணர்வு. அந்த வகையில் இளஞ்சேரலுடைய ஒரு முக்கியமான படைப்பு என்று இந்த கட்சிதம் நாவலைச் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *