(17.08.2011.திருவாரூர் கமலாம்பிகை சந்நிதி .இரவு 9 மணி.தரிசனத்துக்கு வந்திருந்ததொரு தளிர்.இரண்டு கமலாம்பிகைகளின் இணைந்த தரிசனம்)
சந்நிதி முன்வந்த சின்னஞ் சிறுமியின்
கண்களில் கமலாம்பா
பொன்னிதழ் மின்னும் புன்னகைச் சுடரில்
பொலிந்தவள் கமலாம்பா
மின்னல்கள் விசிறும் தாடங்க அசைவில்
மிளிர்ந்தவள் கமலாம்பா
என்னெதிர் நின்றவள் என்னுள் புகுந்தவள்
இவள்தான் கமலாம்பா
சிற்றாடைக்குள் சித்த சொரூபமாய்
சிரித்தவள் கமலாம்பா
உற்றார் நடுவினில் உறவின் கனிவாய்
உதித்தவள் கமலாம்பா
கற்றார் கல்வி கனிந்தே உருகக்
கனிந்தவள் கமலாம்பா
பெற்றார் உடனே பிள்ளை உருவில்
புகுந்தாள் கமலாம்பா
பாதங்கள் அசைந்த நாத லயந்தனில்
பார்த்தேன் கமலாம்பா
ஏதும் மொழியா இதழ்களின் சுழிப்பில்
இருந்தாள் கமலாம்பா
வேதனை தீர்க்கும் வேத முதலென
வந்தாள் கமலாம்பா
ஜோதியின் நடுவிலும் சந்நிதி எதிரிலும்
சிரித்தாள் கமலாம்பா
வந்தவர் மனங்களில் வந்தவள் தானென்று
விதைத்தாள் கமலாம்பா
எந்தச் சலனமும் இல்லாச் சிறுமியாய்
எதிரே கமலாம்பா
தந்தை விரல்பற்றித் தளிர்நடை நடந்தாள்
தேவி கமலாம்பா
சுந்தரி பேரென்ன? நர்மதா என்றே
சொன்னாள் கமலாம்பா

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *