பாண்டவர் கௌரவர் எல்லோருக்கும்
போதனை வழங்கும் ராஜகுரு
ஆண்டிடும் அரசர் தொழுதிடும் துரோணர்
வில்வித்தை தனிலே வீரகுரு
பாண்டவ இளவல் பார்த்திபன் அர்ச்சுனன
பயின்ற வில்வித்தை அரங்கேற்றம்
நீண்டது வரிசை நிறைந்தனர் அரசர்
எங்கும் வீரர்கள் நடமாட்டம்
வித்தை காட்டினான் விஜயன் அங்கே
வந்தவர் எல்லாம் வியந்தனராம்
இத்தகு வீரனை எதிர்ப்பவர் உண்டோ
எனும்குரல் கேட்டு பயந்தனராம்
மொத்த சபையும் மவுனம் காக்க
முழங்கி எழுந்தான் கர்ணனுமே
பித்தா நீஎன்ன அரசனா என்றதும்
தலைகவிழ்ந்தானே வீரனுமே
சிங்கம் போன்றவன் சிறுமைப்பட்டதில்
சிலிர்த்தே துரியோதனனெழுந்தான்
அங்க நாட்டின் அரசனாய் கர்ணனை
ஆக்குவேன் என்றே முரசறைந்தான்
எங்கும் பழிச்சொல் ஏற்றவன் கர்ணன்
இந்த உதவியில் நெகிழ்ந்தானே
பொங்கும் நன்றியில் துரியோதனனின்
பாச நண்பனாய் இணைந்தானே
அன்று தொடங்கிய அன்பின் உறவு
அமர காவியம் ஆகியதே
நன்றி உணர்வும் நட்பின் பலமும்
நாளும் நாளும் கூடியதே
 
துரியோ தனனின் அந்தப் புரத்தில்
சொக்கட்டான் விளையாட்டு
கர்ணனும் பானுமதியும் ஆடிட
கணவன் வருகிற ஒலிகேட்டு
பானுமதியும் பணிவாய் எழுந்தாள்
பின்னால் கர்ணன் பார்க்கவில்லை
ஏனென்று கைகளை நீட்டிட மேகலை
அறுந்தது இதையெதிர் பார்க்கவில்லை
 
மண்ணில்சிதறிய முத்துக்கள் உருண்டு
மன்னனின் கால்களில் மோதியதே
கண்ணெதிர் நண்பன் நின்றிடக் கண்டதும்
கர்ணனின் உள்ளம் பதறியதே
களங்கமில்லாமல் துரியன் கேட்டான்
கைகளில் முத்துக்கள் எடுத்திடவோ
மனங்கவர் நண்பா நீமகிழும்படி
முத்துக்கள் நூலில் கோர்த்திடவோ
 
உள்ளங்கள் கலந்து பழகிய பின்னே
ஒருதுளி ஐயம் வருவதில்லை
வெள்ளம் போன்ற அன்பின் வழியில்
வருத்தம் ஏதும் விளைவதில்லை
 
தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *