பாஞ்ச சன்னியம் முழங்க முழங்க
பாரத யுத்தம் தொடங்கியது
பாண்டவர் கௌரவர் சேனைகள் மோதிட
குருஷேத்திரமே கலங்கியது
அர்ச்சுனன் தேரை கண்ணன் இயக்கிட
சல்லியன் கர்ணனின் சாரதியாம்
கர்ணனை இகழும் சல்லியனாலே
இருவருக்கிடையே மோதல்களாம்
யுத்த களத்தினில் கர்ணனை விட்டு
இறங்கி நடந்தான் சல்லியனே
வித்தகன் கண்ணன் சொன்ன படியே
கணைகள் தொடுத்தான் அர்ச்சுனனே
கொடுத்துச் சிவந்த கர்ணனின் கைகள்
குருதி துடைத்துச் சிவக்கிறதே
அடித்த அம்பினில் உயிர்பிரியாமல்
தர்ம தேவதை தடுக்கிறதே
எய்த அம்புடன் கிடந்த கர்ணன்முன்
வேதியர் வடிவில் கண்ணன்வந்தான்
செய்புண்ணியங்கள் தானமாய் கேட்டான்
சிரித்தபடியே கர்ணன் தந்தான்
விசுவரூபம் காட்டிய கண்ணன்
வரமென்ன வேண்டும் என்றானே
இல்லை என்னாத இதயம் வேண்டும்
என்றே கர்ணன் சொன்னானே
கொடையுளம் வாழ்த்திக் கிளம்பிய கண்ணன்
கணைவிடு பார்த்தா என்றானே
விடும்கணை தைத்து வீழ்ந்தான் கர்ணன்
வானவர் வாழ்த்த மாண்டானே
மகனே என்று அலறிய குந்தி
மடிமேல் இட்டு அழுதிருந்தாள்
அவனே அண்ணன் என்பதை அறிந்து
பாண்டவர் பதறிக் கலங்கிநின்றார்
தம்பியர் என்றே தெரிந்தும் கர்ணன்
தோழனின் பக்கம் நின்றானே
நம்பிய நண்பனின் நட்புக்காக
இன்னுயிர் அவனும் தந்தானே
நன்றிக்கும் கொடைக்கும் நல்லுயிர் தந்தான்
நாயகன் கர்ணன் பெயர்வாழ்க
என்றைக்கும் மாந்தர் இதயத்தில் வாழ்வான்
எங்கள் கர்ணன் புகழ்வாழ்க!!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *