மாநாய்கன் பெற்றமகள் மலர்ந்தாள்

மாசாத்து வான்மகனை மணந்தாள்

மானாய் மருண்டாள்

மதுரைநடந்தாள்

கோனவன் பிழைசெய்ய கண்ணகியும் கனலாகி எழுந்தாள்

சுதிசேர்த்தாள் மாதவியும் யாழில்
சுரம்சேர்த்தாள் பூம்புகாராம் ஊரில்
விதிசேர்த்த காரணம்

 வல்வினையின் காரியம்
 பதிநீத்தான் கோவலனும் பேர்படைத்தாள் பாவிமகள் பாவில்

தூங்காத கண்ணகியின் துயரம்
தமிழ்கண்ட கற்புக்கோர் உயரம்
ஏங்காமல்ஏங்கி
இதயவலிதாங்கி
ஓங்கி நின்றாள் ஆனாலும் மாதவியும் வயிரம்

கலைக்காக மாதவியை சேர்ந்தான்
கோவலனும் ஆனந்தமாய் வாழ்ந்தான்
விலையறியா காதலில்
விளைந்தவொரு ஊடலில்
நிலைதவறி தடுமாறி நடந்தவனோ மதுரையிலே வீழ்ந்தான்

ஆடலிலே சேர்ந்ததந்த உறவு
ஆசையுடன் எத்தனையோ இரவு
கூடலில் மகிழ்ந்தானே
பாடலில் பிரிந்தானே
கூடல்நகர் போனவனை கூப்பிட்டு விதிகொல்ல மறைவு

குலமகளாம் கண்ணகியை பிரிந்தான்
கலைமகளாம் மாதவியை அடைந்தான்
புலம்பவில்லை இவளும்
பூண்டிருந்தாள் மவுனம்
சிலம்புவிற்கக் கிளம்பி சதிவலையில் விழுந்தே இறந்தான்
மதுரையையே எரித்தவள்பின் மாறி
மன்னனுக்கு மகளென்று கூறி
முதுதெய்வம் ஆனாள்
மலையாளம் போனாள்
பதித்துவைத்தான் இளங்கோவும் பெரியசுவை காவியம் பாடி
சோழநாட்டுப் பெண்வாழ்ந்த சரிதம்
சேரநாட்டு இளவரசன் லிகிதம்
ஊழ்வினையால் தென்னவன்
உயிர்நீத்த மன்னவன்
வாழ்வாங்கு வாழுமிடம் வாசிக்கும் செந்தமிழர் இதயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *