கொட்டோடு முழக்கோடு கொலுவிலேறினாள் -அன்னை
கொள்ளையெழில் பொங்கப் பொங்க மனதிலேறினாள்
பொட்டோடு பூவோடு மாதர்வாழவே -அன்னை
பூரணமாய் கருணைதந்து பரிவுகாட்டினாள்

தீபத்தின் ஒளியினிலே தகதகக்கிறாள்-அன்னை
திருவிளக்கின் சுடராகத் தானிருக்கிறாள்
நாபிதனில் ஒலியாக  நிறைந்திருக்கிறாள்-அன்னை
நாதத்துள் மௌனமென மறைந்திருக்கிறாள்

சாமரங்கள் வீசியுப சாரம்செய்கையில்-அவள்
சிலையெனநாம் செம்பட்டு சார்த்தி நிற்கையில்
நாமங்களோர் ஆயிரமும் நவின்றிருக்கையில்-அன்னை
நேர்படவே மழலையாக வந்துநிற்கிறாள்

கோடிமலர் பாதமிட்டும் தீரவில்லையே-அவள்
கொலுவழகைப் பார்க்கும்வேட்கை ஆறவில்லையே
தோடெறிந்த தேவதேவி தென்படுவாளே-வினை

தானெரிந்து போகும்படி அருள்தருவாளே

சந்தனமும் சரமலரும் சூட்டும் போதிலே-சிறு
சலங்கையொலி மெல்லமெல்லக் கேட்கும் காதிலே

மந்திரங்கள் சொல்லச் சொல்ல ரூபம்தோன்றுதே-இனி
மறுமையென்னும் ஒன்றில்லாமல் முடிந்து போகுதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *