சத்குருவின் மஹாபாரத் நிகழ்ச்சிக்காக, மகாபாரதக் கதையைப் பின்புலத்தில் கொண்டு வாழ்வின் அடிப்படைகளை வினவும் விதமாய் ஒரு பாடல் வேண்டுமென சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் கேட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தந்த பாடல் இது:

 யாரும் போடாத பாதை- இது
எங்கோ போகின்ற சாலை
வேர்கள் இல்லாத மரமா-இந்த
வாழ்க்கை வலியா வரமா



முடிவே இல்லாத பயணம்-அட
முனிவன் நெஞ்சிலும் சலனம்
விடிந்த பின்னாலும் இருளா-இந்த
வாழ்க்கை புதிரா பதிலா



தர்மம் வனத்தினில் பதுங்கும்-இங்கு
தலைக்கனம் ஆட்சியைத் தொடங்கும்
மர்மம் நிறைகிற கதையா- இந்த
வாழ்க்கை கனவா நனவா



மண்ணால் எழுந்தது யுத்தம்-இங்கு
பெண்ணால் வளர்ந்தது யுத்தம்
கண்ணா நாடகம் எதற்கு-இது
கழித்தல் கூட்டல் கணக்கு



காலம் உருட்டிடும் பகடை -இதில்
காய்களுக் கேனோ கவலை
மூலம் அறிந்தவன் ஒருவன் -இதை
முடிக்கத் தெரிந்த தலைவன்



நம்பிய எதுவும் மாறும்-இதில்
நிஜமும் பொய்யாய் ஆகும்
தம்பியைக் கொல்பவன் அண்ணன் -இதில்
தர்மத்தின் குரலாய் கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *