நீவந்த நாளின்றுதானோ-இதை

நீசொல்லி நான்நம்புவேனோ
வான்வந்த நாள்தானே நீவந்தநாள்-மலரில்
தேன்வந்த நாள்தானே உன் பிறந்தநாள்

ஆதார சுருதிக்கு ஆண்டேது நாளேது
அய்யாநீ அதுபோன்ற சங்கீதமே
பேதங்கள் ஏதொன்றும் பாராத திருவேநீ
பிரபஞ்சங்கள் முழுமைக்கும் பூபாளமே

முடிவேதும் இல்லாத ஆகாயமே-உன்
மடிமீது நான்கூடப் பூமேகமே
படியாத என்னெஞ்சம் படிகின்ற இடமாகும்
மலராக அசைகின்ற உன்பாதமே-

உன்பார்வைஒளியாக என்னெஞ்சம் அகலாக
என்னுள்ளே ஒருஜோதி உருவானதே
என்மோகப் புயல்வீச என்தேகம் அலைபாய
நீதந்த ஒளிமட்டும் நிலையானதே

நீதந்த பாதைதான் நான்செல்வது-அதில்
நான்வீழும் பள்ளங்கள் நான்செய்தது
நீவந்து கைதந்து நடைபோடச் சொல்லாமல்
இனியெங்கு நான்செல்வது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *