அவள்தான் அவள்தான் அடைக்கலம்
அருளே அவளின் படைக்கலம்
கவலை முழுதும் எரித்திடும்
கருணை அவளின் சூத்திரம்

சாகச மனம்செய்யும் சேட்டைகளில் அவள்
சாட்சி மாத்திரமே
சாட்டை அடிகளும் வாட்டி வதைக்கையில்
சாபல்யம் அவள்பதமே
ஆகாயம் அவள் ஆடுகளம் அதில்
அல்லென ஆடுகிறாள்
ஆயிரம் ஆயிரம் விண்மீன் நடுவே
நிலவென்று தோன்றுகிறாள்

கோணல் மனங்களின் கோடுகளை அவள்
கோலங்கள் செய்வாளோ
கோடி வினைகளும் மூள்கையிலே ஒரு
பார்வையில் எரிப்பாளோ
கேணியில் அமுதம் ஊறிடச் செய்பவள்
கடவூர் ஆளுகிறாள்
கேடுகள் எதுவும் சூழவிடாமலே
கனலாய்த் தோன்றுகிறாள்

இருள்கிற வானிடை எழுநிலவாய் அவள்
எறிந்தனள் தாடங்கமே
இருண்டஎன் நெஞ்சினில் எழுந்திடுவாளோ
இதுதான் ஆதங்கமே
உருள்கிற காலங்கள் உருட்டிடும் தாயெனை
ஒருமுறை பார்ப்பாளோ
உள்ளொளி காட்டவும் தன்னிழல் சேர்க்கவும்
உத்தமி நினைப்பாளோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *