அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தான்.நோயின் தீவிரம் அந்தப் பிஞ்சு மனதை சோர்வடையச் செய்யாமல் இருக்க அவனுடைய தாய் ஜன்னலருகே அமர்ந்து கொண்டு வெளியே நடப்பவற்றை நடித்துக் காட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.அன்னையின் அங்க
சேஷ்டைகளை அரும்புப் புன்னகையுடன் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன்தான் வெள்ளித் திரையின் சேஷ்டை நாயகனாய் வலம் வந்த சார்லி சாப்ளின்.

அந்த அன்னைதான் வறுமையின் கொடுமையால் தன் மகனுக்கிருந்த ஒரே மாற்றுடையை அடகு வைத்து அடுத்தவேளை உணவுக்கு வழிதேடினாள்.அதே அன்னைதான் அடிக்கடி மனநிலை பிறந்து
மனநோயாளிகள் விடுதிகளில் இடம்தேடினாள்.

சாப்ளினின் பெற்றோர்கள் சார்லஸ் மற்றும் ஹன்னா ஆகியோர் இங்கிலாந்து நாட்டின் எளிய
இசைக்கலைஞர்கள்.1889ல் பிறந்த சார்லி சாப்ளினுடைய பிஞ்சு முதுகில பாரங்கள் ஏறின.வேலை
வாய்ப்பு தேடி தந்தை நியூயார்க் செல்ல,மனச்சிதைவுக்கு ஆளான தாய் அடிக்கடி மருத்துவமனைகளிலும்
மனநோய் காப்பகங்களிலும் தங்கிவிட,அனாதை இல்லங்களிலும் வேலைபார்க்கும் இடங்களிலும்
தங்கி வளர்ந்தார் சார்லி சாப்ளின். நடிகராய் வாழ்வைத் தொடங்கும்போது சாப்ளினுக்கு வயது
எட்டு.

சின்ன வயதில் எத்தனையோ வேலைகள் பார்த்தார் சார்லி சாப்ளின்.இங்கிலாந்தில் பார்த்த
பட்லர் வேலையும் அவற்றில் ஒன்று. ஆனால் உணவக உரிமையாளரின் வாத்தியக் கருவியை
எடுத்து வாசித்துப் பார்த்த குற்றத்திற்காக வேலையை விட்டுத் துரத்தப்பட்டார்.ஆனால் தன்
இசைத் திறமையையும் ஆர்வத்தையும் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் வளர்த்துக்
கொண்டார் சார்லி சாப்ளின்.

தோற்றத்தில் அடால்ஃப் ஹிட்லரை ஒத்திருந்த சார்லி சாப்ளின் ஹிட்லரை விட நான்கு நாட்கள்
மூத்தவர்.தொடக்கத்தில் சார்லி சாப்ளின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும்
கூடிக் கொண்டிருந்தன.அமெரிக்காவுக்கே அவர் விசுவாசமாய் இருப்பதாய் இங்கிலாந்து அரசாங்கம்
எண்ணியது.தன் திரைப்படங்கள் வழியே அவர் கம்யூனிசக் கருத்துக்களைப் பரப்புகிறார் என்றும்
அரசாங்கம் நினைத்தது.சாப்ளினுடன் சேர்ந்து வாழ்ந்த 22 வயதுப்பெண்ணான ஜோன் பேரியின்
கொடுமையான நடவடிக்கைகளால் அவரைப் பிரிந்தார் சாப்ளின்.ஆனால் தான் கர்ப்பமாக
இருப்பதாகவும் அதற்கு சாப்ளின்தான் காரணமென்றும் வழக்குத் தொடுத்தார் அந்தப் பெண்.
இரத்தப் பரிசோதனைகளோதாந்தக் கருவுக்கு சாப்ளின் தந்தை இல்லை என்று தெரிவித்தது.

ஆனால் அந்தக் காலங்களில் இரத்தப் பரிசோதனை போதுமான ஆதாரமாகக் கருதப்படவில்லை.
எனவே அந்தக் குழந்தைக்கு 21 வயதாகும் வரை வாரம் 75 டாலர்கள் தரச்சொல்லி சாப்ளினுக்கு
நீதிமன்றம் உத்தரவிட்டது.

“அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ” என்று புலம்ப நேர்ந்தது சார்லி சாப்ளினுக்கு.

இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவுக்கு உதவியாக நிதி தந்ததால் அமெரிக்க நாட்டின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டார் சார்லி சாப்ளின்.ஆனால் அவருக்கெதிரான
ஆதாரங்கள் ஏதும் அரசின் வசம் இல்லை.

திருமணங்களும் விவாகரத்துகளும் தொடர்கதைகள் ஆயின. நான்குமுறை திருமணம்
செய்து கொண்டார் சார்லி சாப்ளின்.மொத்தம் 11 குழந்தைகள்.அரசுகள் அலைக்கழித்ததால் சுவிட்சர்லாந்தில் சென்று தங்கினார் சார்லி சாப்ளின். கலைகளின் தலைநகரான
பிரெஞ்சு தேசம் அவருக்கு உயரிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் தந்தது.ஒரு காலத்தில் அவரை சந்தேகக் கண்களுடன் பார்த்த பிரிட்டிஷ் அரசாங்கம்,மகாராணியின்
மகத்தான அங்கீகாரமாகிய க்னைட் பேச்சலர் விருது வழங்கியது.

சார்லி சாப்ளின் வசித்த மாளிகையான பிரேக் அவே ஹவுஸ் விருந்தோம்பலும் கேளிக்கைகளும்
தொடர்ந்து நடைபெறும் இடமாய் ஆனது. பெயருக்கேற்ப கட்டிடத்தின் சில பகுதிகள் அவ்வப்போது
உதிர்ந்து விழும் விதமாக வடிவமைத்திருந்தார் சார்லி சாப்ளின்.அங்கிருந்த பைப் ஆர்கன் ஒன்றை
விருந்தினர்களுக்கு வாசித்துக் காட்டியும்,தன் பிரத்யேகத் திரையரங்கில் தன்னுடைய படங்களை
திரையிட்டும் விருந்தினர்களை குஷிப்படுத்துவதில் சார்லி சாப்ளினுக்கு அலாதி பிரியம். டென்னிஸ்
விளையாட்டிலும் அளவில்லாத ஆர்வம் அவருக்கு.

பேசாப்படங்களிலும் பேசாப் பொருள்களைப் பேசத்துணிந்தவர் சார்லி சாப்ளின்.தன் அரசியல் கருத்துக்களை அங்கதச் சுவையுடன் சொன்ன சார்லி சாப்ளின் தன்னை கட்சி அரசியல் சாராத
கலைஞராகவே காட்டிக் கொள்ள விரும்பினார்.

தன்னுடைய படங்களைத் தொடங்கும் முன்னால் முழு திரைக்கதையையும் எழுதும் வழக்கம்
சார்லி சாப்ளினுக்கு இல்லை.மனதில் தோன்றும் மையக்கருவுக்கு அவ்வப்போது படப்பிடிப்புத்
தளத்திலேயே வடிவம் கொடுப்பது சாப்ளினின் பாணி.

அந்தக் கால உலகநாயகனான மார்லின் பிராண்டோவுக்கு சார்லி சாப்ளின் மேல் அபாரமான
மரியாதை இருந்தது.திரையுலகம் உருவாக்கிய நடிகர்களிலேயே நிகரில்லாத திறமைசாலி
என்று சாப்ளினை அவர் புகழ்ந்தார்.அப்படியே இருந்திருந்தால் சிக்கலில்லை.சார்லி சாப்ளினின்
கடைசிப் படமான”எ கவுண்ட்டஸ் ஃப்ரம் ஹாங்காங் “என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்ததில்
வந்தது வினை.”இவ்வளவு குரூரமான மனசு படைச்ச ஆளை நான் பார்த்ததேயில்லை”என்றார் மார்லின்
பிராண்டோ.”இந்த ஆளுகூட மனுஷன் நடிப்பானா”என்று அலுத்துக் கொண்டார் சார்லி சாப்ளின்.
ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருப்பது எப்போதும் சாத்தியமில்லை.

ஆனாலும் சார்லி சாப்ளினின் அபாரத் திறமையை உலகத் திரைக்கலைஞர்கள் உச்சிமேல்
வைத்துக் கொண்டாடுகிறார்கள்.வாழும் காலத்திலேயும் மிக உயர்ந்த விருதுகள் சார்லி
சாப்ளினைத் தேடி வந்தன.ஆஸ்கார் விருதும் அதிலே அடங்கும்.

பொதுவாக மூக்குக்குக் கீழே செவ்வகமாய் சின்னதாய் இருக்கும் மீசைக்கு ஹிட்லர்மீசை என்று
பெயர் சொல்கிறோம்.ஆனால் சார்லி சாப்ளின் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் விதம் பார்த்து
வியந்த ஹிட்லர்,சார்லி சாப்ளின் போல் தானும் மீசை வைத்துக் கொண்டாராம்.இத்தனைக்கும்
ஹிட்லர் சார்லி சாப்ளினின் ரசிகர் அல்ல. அவருக்கு சார்லி சாப்ளின் மேல் தவறான அபிப்பிராயங்களே
அதிகமிருந்தன.

நடிப்பதை நிறுத்திக் கொண்ட பிறகு, தன்னுடைய பழைய மௌனப் படங்களுக்கு தானே இசையமைத்து
மீண்டும் வெளியிடும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டார் சார்லி சாப்ளின்.

“நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்க எனக்கு வேறொன்றும் வேண்டாம்.ஒரு பூங்கா,ஒரு போலீஸ்காரர்,
அழகான ஒரு பெண் இருந்தால் போதும் “என்பார் சாப்ளின்.”காலம் முழுவதும் ஒரு கோமாளியாகவே
நான் இருந்திருக்கிறேன்.அதுவே என்னை பல அரசியல் தலைவர்களை விடவும் புகழின் உச்சத்தில்
அமர்த்தியது”என்றும் ஒருமுறை குறிப்பிட்டார்.

அவர் பெரிதும் நேசித்த அமெரிக்கா அவரை நடத்திய விதம் அவரை சோர்வடையச் செய்தது.”இனி
அமெரிக்கா எனக்குப் பயன்படாது.ஒருவேளை ஏசுநாதர் அமெரிக்க அதிபரானால் அங்கே நான் மீண்டும்
போகக் கூடும்” என்றார் அவர்.

வாழ்க்கை என்றால் என்னவென்று சினிமா பாஷையில் சாப்ளின் சொன்னது அவருடைய மகாவாக்கியம்
என்று சொல்லத்தக்கது. “குளோஸ் அப்பில் பார்த்தால் வாழ்க்கை ஒரு சோகக் காட்சி.லாங் ஷாட்டில்
பார்த்தால் அதுவே செமை காமெடி!!”

ஒரு சிறிய மீனுக்குக் கூட அதன் வாழ்க்கை மகத்தானது என்று உறுதியாக நம்பிய சார்லி சாப்ளின்,
1977 டிசம்பர் 25ல் மறைந்தார்.ஆனால் அவருடைய ரகளை அத்துடன் முடியவில்லை.1978ல்
கல்லறையிலிருந்து அவருடைய பிணம் திருடப்பட்டது.மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும்
கட்டுறுதி மிக்க சிமெண்ட் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தன் கல்லறையில்
மறுபடி படுத்துக் கொண்டார் சார்லி சாப்ளின்.

ஆனாலும் அவர் பேசிய மௌன மொழி உலகின் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டே
இருக்கிறது …எப்போதும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *