நண்பர் சுகா எழுதிய கட்டுரை ஒன்றைக் குழுமத்தில் படித்த நண்பர் துகாராம்,
சோடா தமிழர் பானமா என்ற கேள்வியை எழுப்பினார்.அது தமிழர் பானமே,
கோலி சோடாவில் அடைபட்டிருப்பது தமிழர் மானமே என்று நிறுவி நான் எழுதிய ஆய்வுக் கட்டுரை(?).
இது தொடர்பாக வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டங்கள் கண்டிப்பாக ஏற்கப்பட
மாட்டாது

ஓடா நீர்நிலை உலர்மரக் கோடை
பாடாப் புள்ளினம் பயிலாப் புல்வெளி
நீடார் வெம்மை நீங்கிடத் தமிழர்
சோடா பருகிச் சுகம் பெறுவாரே”

என்னும் பழம்பாடல் வழியே, சோடா தமிழர் பானம் என்று நிறுவலாம்.

“ஆயுங்காலை அடர்ந்திடு குடுவையில்
வாயு கலந்த வெற்று நீரினைக்
கோயமுத்தூர்க் கோலி அடைத்து
வாயில் கவிழ்ப்பர் வண்டமிழ் மரபினர்”

என்று கோவைக்கலியிலும் ஒரு பாடல் காணப்படுகிறது

இனி,வருங்காலக் குறிப்புகளை முன்கூட்டியே பாடிய கிளிப்பாணி பித்தர் சுவடிகளில்

“தென்னாட்டவரும் தன்னிலை திரிந்து
தன்னாட்டவரின் தூநீர் மறந்து
பன்னாட்டவரின் பானங்கலந்து
என்னாட்டங்கள் இங்காடுவரோ”
என்று பாடியிருப்பதால்

“பன்னாட்டவரின் பானங்கலந்து” என்பது மதுவில் கலக்கும் சோடா கூட வெளிநாட்டுத் தயாரிப்பாக இருக்கும் என்ற குறிப்பைச் சுட்டுவதாய் உய்த்துணரலாம்.

இன்னுந் தேடினால் சோடா தமிழர் பானமே என்று முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத்தக்க வகையில் தரவுகள் கிடைக்கும் .
மிக முக்கியமான தகவல் என்னவென்றால், சுகா கட்டுரை படித்து துகாராம் இந்தக் கேள்வியை எழுப்புவார் என்பதையும் கிளிப்பாணிப்பித்தர் முன்கூட்டியே பாடியுள்ளார்.

“தகாதன செய்யும் தன்மையன் ஒருவன்
சுகாவெனும் பெயரினன் சுடர்மின் சுவடியில்
மிகாநிலை மிகுந்து முன் புனை உரைக்கு
துகாராம் வினாவுந் துலங்கிடுமாறே”

என்ற பாடல் எதேச்சையாகக் கண்ணில் பட்டபோது இறும்பூது எய்தினேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *