திருவடித் தாமரை மலர்ந்தது
தேன்துளி என்னுள் நிறைந்தது
குருவடிவாக அருளுருவாக
குளிர்மழை இங்கு பொழிந்தது-என்
கொடும்வினை எல்லாம் கரைந்தது
 
சுடுமணல் வழியினில் தினம்நடந்தேன்-ஒரு
தருநிழல் தேடியே தினம்நடந்தேன்
திருமுகம் அறிந்ததும் மனம் குளிர்ந்தேன்-உன்
அருளெனும் சுனையினில் உயிர்நனைந்தேன்

தாவரம் ஒன்றின் தவிப்படங்க
ஜீவநதியொன்று தரையிறங்க
அடடா…இதுஎன்ன அதிசயமோ
அதுதான் அதுதான் ரகசியமோ

வினைகளின் வலையினில் நேற்றின்சுகம்
புதிரென்று விரட்டிடும் பார்த்த சுகம்
கதவுகள் திறந்ததும் காற்றின்சுகம்
குழலினில் மிதந்திடும் பாட்டின் சுகம்

ஏங்கிடும் வாழ்வினில் ஏதுசுகம்
தாங்கிடும் உன்கரம் தேவசுகம்
உணர்ந்தேன்… உனது பாதசுகம்
உடைந்தேன் அதுதான் ஞானசுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *