ரொம்ப வருஷங்களுக்கு முன்னர்,ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு பாடல் எழுத அழைத்தார்கள்.”முக்கியமான பாட்டுங்க…இந்தியத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக ஜேசுதாஸ் ஒரு சீரியலுக்கு பாடப் போறாரு.நீங்கதான் பாட்டு எழுதப் போறீங்க.டூயட் சாங்”என்றார்கள்..

சீரியல் பேரு என்னங்க?

அது இன்னும் வைக்கலீங்க..ஆங் சொல்ல மறந்துட்டேன்.அதுக்கு ஒரு டைட்டில் சாங்கும் வேணும்

அப்ப டைட்டில் தெரியணுமில்லீங்களா!

அது சொல்றோம் சார்! முதல்ல டூயட் எழுதுங்க!இது காமெடி சீரியல் . அதனாலே டூயட் சாங் கொஞ்சம் காமெடியா இருக்கணும். கே.எம்.ராஜு மியூசிக்.அட்ரஸ் சொல்றோம்..வந்துடுங்க..

லுங்கியும் பனியனுமாக வீட்டில் இருந்தார் ராஜு.அவருடைய மனைவி திருமதி லதா ராஜு,தொலைக்காட்சியில் பெரிய பதவியில் இருந்தார்.
ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவுக்கு ஆஸ்தான இசையமைப்பாளர்
ராஜு.

இரண்டு ஹீரோக்களுக்கான சீரியல்.ஒரு ஹீரோ வெற்றி விக்னேஷ்வர்.(இப்போது அநேக பக்திப் படங்களில் அவர்தான் ஹீரோ என்று கேள்வி. உருண்டு புரண்டு சாமி கும்பிடுவாராம்.) வீட்டு வேலைக்காரி
விநோதினியை விரும்புகிறார்.பையனின் அப்பா தடை.அப்பாவின் எதிர்ப்பை மீறி கைப்பிடிக்க கனவு காண்கிறார்கள்.ஊதுபத்தி புகையிலிருந்து கனவுப்புகைக்கு காட்சி மாறும்போது பாடல் தொடங்கும்.

“பல்லவியில பிராமின் காஸ்ட்யூம்.முதல் சரணத்துலே கிறிஸ்டியன்
காஸ்ட்யூம்.ரெண்டாவது சரணத்துலே முஸ்லிம் காஸ்ட்யூம்.ஒவ்வொரு
பல்லவியிலேயும் பையனோட அப்பாவ கிண்டல் ப்ண்ணனும்.பட்சே… லவ்
கான்செப்ட்”என்றார் ராஜு.

அதுசரி.காதலை விட காமெடி ஒன்று உண்டா என்ன?யோசிக்கும்போதே ஆர்மோனியத்தை இசைத்துக் கொண்டே தத்தகாரம் பாடிக்காட்டினார்:

“தரரே தரரா-தர
தரரே ரரரா-தர
தரராரே தரராரி ரா….
தானன்னனே தன தன்னானேனா
தானன்னனே தன தன்னானேனா
தனனே தனனா தனனே தனனா
தன தானே…தானின னா….

“ஞான் இப்ப வரூ..” என்று கொஸ்டின் பேப்பர் கொடுத்த வாத்தியார் போல்
சந்தேகப் பார்வை பார்த்துவிட்டு எழுந்து போனார் அவர்.

15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் வருவதற்குள் நான் எழுதியிருந்த பல்லவி,
அவருக்குப் பிடித்திருந்தது.சினிமா பாஷையில் சொன்னால்,அவருக்கு மேட்டரை விட மீட்டர் முக்கியம்.

“அழகே அழகே-கொஞ்சம்
அருகே வரவா-புது
மடிசாரில் அசைந்தாடி வா
ஆசாரங்கள் இங்கே கூடாதம்மா
காதல்வந்தால் அங்கே பஞ்சாங்கமா
இணைந்தோம் கிளியே கலந்தோம் நிலவே
இளம்பூவே  சேர்ந்திட வா…”

டைரக்டர் அருகில் இல்லை .ஆனால் ராஜு “பல்லவி ஓக்கே.ஆயாளுக்கு ஞான்
பரயாம்.இப்போ சரணம்”என்று பாய்ச்சல் சந்தம் ஒன்றை வாசித்துக்
காட்டினார்.கிறிஸ்துவ மதத்தின் கல்யாண உடையில் காட்சி மாறுமாம்:

தாரத் தரத்த ராரே
தாரத் தரத்த ராரே
தாரத் தரத்த ராரீரா ..

சில நிமிஷங்களிலேயே வரிகளைச் சொன்னேன்.

“காலம் தடுத்த போதும்
காதல் ஜெயித்து வாழும்
ஆடும் இளைய பூங்கொடி”

ராஜு உற்சாகமாகி,முதல் சரணத்தின் அடுத்த பகுதியையும் வாசித்தார்:
‘இங்கே பையன்ட அச்சனை கேலி  செய்யணும்’ என்று நினைவு படுத்தினார்:
தாரார தார தாரரே
தாரார தார தாரரே
தரர்ர தார தார தார தாரரீ

“ஏவாளின் காதல் வென்றதே
ஆதாமின் அப்பன் இல்லையே
இறைவன் ஏற்றுக் கொண்ட சொந்தம் தானடி”
என்ற வரியும் ஓகேயானது.இப்படியே பாடல் முழுவதையும் முடிக்கும்போது
டைரக்டரும் வந்தார்.ஸ்ரீதரிடம் வேலை பார்த்தவராம்.பாட்டைக் கேட்டுவிட்டு,
“நல்லா வந்திருக்கு!டைட்டில் சாங் எழுதிடுங்க”என்றவரிடம் டைட்டில்
என்னசார்?என்றோம்.

“இன்னும் வைக்கலை” என்றார் இரக்கமேயில்லாமல். இரண்டு சகோதரர்கள்.
பெரியவன் பாச்சா.பரமசாது.பக்திமான்.சின்னவன் கீச்சா. ரெட்டைவால்.ரகளையான ஆள். வெற்றி விக்னேஷ்வர் பாச்சா.கணேஷ்(ஆர்த்தி) கீச்சா. பாச்சாவுக்கு அவர்களின் அப்பா விஞ்ஞானி(மௌனராகத்தில் வருகிற மிஸ்டர் சந்திரமௌலி) வில்லங்கமான ஊசி ஒன்றை அவர் பாச்சாவுக்குப் போட்டதும் கதை கந்தலாகிறது.

டைரக்டர் சொன்னார்,”தம்பி! இந்தக் கதைய வச்சு சரணத்தை எழுதீடுங்க!
டைட்டில் ரெடியானதும் பல்லவியிலே டைட்டில் வச்சுக்கிடலாம்.
இசையமைப்பாளர்,கழுவுகிற மீனில் நழுவுகிற மீனானார்.”அப்போ லிரிக்ஸ்
எழுதட்டும்!பின்னே ட்யூன் செய்யாம்”

“பாச்சாவுக்கு பக்திமுத்தி போயிருப்பான் காசி
போகுமுன்னே அப்பன்வந்து போட்டுப்புட்டான் ஊசி
காமெடிக்கும் எங்களுக்கும் ராசிநல்ல ராசி
கவலையெல்லாம் மறந்திருப்போம் கமான் டேக்கிட் ஈஸி”

“பாச்சா கீச்சா அடிக்கும்லூட்டி பாக்க வேணும் நீங்க
மனசுவிட்டு சிரிக்கவைக்க வந்திருக்கோம் நாங்க
வாரா வாரம் எங்களுக்குக் காத்திருங்க நீங்க
கவலையெல்லாம் மறக்கவைப்போம் ஒரே ஜாலிதாங்க”

என்ற இரு சரணங்களுக்கும் டியூன் செய்து ஒரு வாரத்துக்குப் பிறகு
சீரியலுக்குப் பெயர் வைத்தார்கள்.”ஹரே பாச்சா ஹரே கீச்சா”என்று.
அவசரம் அவசரமாய் என்னிடம் தொலைபேசியில் கேட்டுப் பெற்ற பல்லவி,

“ஹரே பாச்சா ! ஹரே கீச்சா! இது புதுவித பஜனையப்பா
பசுவைப்போல பாச்சா!குரங்குப்பய கீச்சா!தெனம்தெனம் ரகளையப்பா”

ஆனால்……
படம் எடுப்பதாக இருந்தாலும் சரி,
பிரபல வார இதழில் தொடர் எழுதுவதானாலும்சரி…இப்போதெல்லாம் முதலில்
தலைப்பு வைப்பதில்தான் முழு கவனம் செலுத்துகிறார்கள்.
அதற்கென்ன என்கிறீர்களா/போகப்போகப் புரியும்.இந்தக் கட்டுரையின் நோக்கம்
தெரியும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *