இதற்கு முன்னால் நான் இறைவனாயிருந்தேன்.
படைத்துக் குவிப்பதும், பராமரிப்பதும்
துடைத்து முடிப்பதும் தொழில்களாயிருந்தன.
நதிகள், கடல்கள், நிறையத் துப்பினேன்.
மண், கல் பிசைந்து மலைகள் படைத்தேன்,
புலர்வதும் மறைவதும் பொழுதுகளென்பதும்,
மலர்வதும் உதிர்வதும் மலர்களென்பதும்
வாய்ப்பாடுகள் போல் வழக்கில் வந்தன.
மோதல்கள், காதல்கள், மகிழ்ச்சி, வருத்தம்
யாவையும் சுழற்சியின் ஒழுங்கில் இயங்கின.
நியதிகளுக்குள்ளே நின்ற உலகத்தில்
மெதுமெதுவாய் என்னை மறக்கலாயினர்.
கோவிலில் என்னைக் கொண்டு போய் வைத்தனர்.
மீட்க வந்தவரைத் தீயி லெரித்தனர்.
சடங்குகள் நிறைந்த சப்த இரைச்சலில்
சூழ்நிலைக் கைதியாய் வாழ்வது கொடுமை.
இறைவனாய் ஆனபின் இனியென்ன ஆவது?
அவஸ்தையும் ஒருவித அச்சமும் படர்ந்தது.
கூப்பிய கைகளைக் காண்கிற போதெல்லாம்
ஏகமாய் எரிச்சல் என்னுள் எழுந்தது.
நைவேத்தியங்களும் நித்ய அர்ச்சனையும் & என்
கையாலாகாத் தனமென்று கருதினேன்.
கருணை மலர்ந்து கனிந்த கண்களில்
கனல்விட்டெரிந்தது கோப நெருப்பு.
அபயக் கரமோ ஆயுதமெடுத்தது.
காக்கும் கடமை காற்றில் பறக்கத்
தாக்கித் தகர்க்கும் வன்மம் பிறந்தது.
பூவிதழ் ஓரத்துப் புன்னகை மறைந்து
பக்கவாட்டில் பற்கள் முளைத்தன.
இஷ்ட தெய்வமாய் என்னைத் துதித்தவர்
“துஷ்ட தேவதை” எனத் துரத்தத் தொடங்கினர்.
ஆசிர்வாதத்தை அலட்சியம் செய்தவர்
சாபத்துக் கஞ்சி சாந்திகள் செய்தனர்.
இருந்த கோவிலை இழுத்து மூடி & நான்
மரங்களில் குளங்களில் வசிப்பதாய்க் கூறினர்.
கடவுளாயிருந்ததைக் காட்டிலுமெனக்கு
இந்த ஏற்பாட்டில் எத்தனை வசதி,
பின்னர்தான் நானொரு பைசாசமானேன்.
பகல் வெப்பத்தில் பதுங்கி உறங்கி
இரவு நேரத்தில் எழுந்து நடந்தேன்.
காற்றாய்க் கிளர்ந்து கதவுகள் இடித்தேன்.
கற்களை எறிந்து ஓடுகள் உடைத்தேன்.
போகிற மனிதரைப் “பளீரென” அறைந்ததும்
சாகிற காட்சி சுவாரஸ்யம் தந்தது,
மந்திர ஒலிகள் மறந்து போனபின்
கண்டத்திலிருந்து கிளர்ந்தது ஊளை,
அந்தி,சந்தி, அர்த்த ஜாமங்களில்
ஒவ்வொரு வீட்டிலும் உயிர்ப்பயம் வந்தது.
நீதி காக்கின்ற கடவுள் தொழிலினும்
ஆதிக்கப் பேயாய் அலைவதே எளிது;
ஒருநாள் ஊருக்குள் ஒரே பரபரப்பு & என்
பழைய கோவிலில் புனருத்தாரணம்.
“மற்றொரு தெய்வம் மண்ணில் வந்தென்னை
வெற்றி கொள்ளும்” என வெகுவாய் நம்பினர்.
என்னை முன்னர் ஏற்றித் தொழுதவர்
பின்னிந்த தெய்வத்தின் பூஜையில் மூழ்கினர்.
கேட்கக் கேட்கச் சிரிப்பு வந்தது.
கோவில் திசையினைப் பார்த்துக் கூவினேன்
“நாளைய பேயே! நல்வரவாகுக!”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *