IMG-20160102-WA0015ஒளியின் ஸ்வரங்கள் ஒலிக்கிற நேரம்
வெளிச்சத் தந்தியில் விரல்தொடுவாயா?
களியின் மயக்கம் கவிதரும் நேரம்
குயிலே குயிலே குரல்தருவாயா
வெளிச்சம் இசையாய் வருகிற நேரம்
வந்துன் அழகால் நிறம் தருவாயா
கிளிகள் கொத்தும் கனியின் சுவையாய்
கனிந்த அன்பின் வரம்தருவாயா

தூரத்து நிலவைத் துரத்தும் முகில்நான்
தங்கித் தவழ மலை தருவாயா
தீபத்தின் ஒளியை மலர்த்தும் அகல்நான்
தீராக் காதலின் திரி தருவாயா
மாதவி சிலம்பின் மௌனப் பரல்நான்
மகர யாழே மொழிதருவாயா
நேசக் குளிரில் நடுங்கும் கனல்நான்
நீளும் பனியே துகில்தருவாயா