ஒருபெண்ணைச் சொல்லும் போதோ
 உன்னைத்தான் உவமை சொல்வார் 
வரும்பொருள் எல்லாம் உந்தன்    
 விழிபடும்    மகிமை என்பார் 
கருநிறம் கொண்ட மாலின் 
    கமலத்து மார்பில் நின்றாய் 
 திருவெனும் தேவி உந்தன்
    திருவடி சரணம் அம்மா
கடைந்தபாற் கடலை விட்டுக்
 கிளம்பிய அமுதம் நீதான்
 நடந்த காகுத்தன்  பின்னே
 நடைபயில் சீதை நீதான்
 உடைந்துபோய் அழுவோரெல்லாம் 
ஒருவாறு தேருமாறு 
அடைந்திடும்  ஊக்கம் நீதான் 
அடையாத கதவம் நீதான்
பொன்னிற மாதே நீயும் 
புயல்வண்ணன் தோள்கள் சேர்ந்தாய்
 செந்நிறக் கமலம் நின்றாய்
 சேவடி தொழுவோர்க்கெல்லாம் 
எண்வகைக் காட்சி தந்தாய் 
எண்ணிய எல்லாம் நல்கும் 
புண்ணியத் திருவே உன்னைப்
பணிந்தவர் பணியார் மண்ணில்
மைவிழி கமலமாகும் 
மாதவன் ஏங்கிப் பற்றும் 
கைகளும் கமலமாகும்
கால்களைக் கமலம் தாங்கும்
 நெய்விளக் கொளியில் வந்து 
நேர்பட நிற்கும் தாயே 
நைந்திடும் நிலையைமாற்றி 
நல்வழி சேர்ப்பாய் நீயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *