அலைகள் புரண்டெழும் ஓசையிலே-ஓர்

அழகியின் சிரிப்பொலி கேட்கிறது

விலைகள் இல்லாப்  புதையல்களில்-அவள்

வண்ணத் திருமுகம் தெரிகிறது

நிலைபெறும் பாற்கடல் பாம்பணையில்-அந்த

நாயகி சரசம் நிகழ்கிறது

வலைவிழும் மீன்களின் துள்ளலைப்போல்-அவள்

விழிபடும் இடமெலாம் கொழிக்கிறது

அறிதுயில் கொள்ளும் பரந்தாமன் -அவன்

அமைதிக்குக் காரணம் மஹாலஷ்மி

வறுமையைக் களையும் வரலஷ்மி-நல்

வளங்கள் தருவாள் தனலஷ்மி

மறுவே இல்லா நிலவாக-நம்

மனங்களில் உதிப்பவள் கஜலஷ்மி

மறுபடி மறுபடி வரும்பசியை-மிக

மகிழ்வாய் தணிப்பாள் சுபலஷ்மி

தானியக் களஞ்சியம் நிரம்பிடவும்-மிகு

தங்கம் வைரம் நிறைந்திடவும்

தேனினும் இனிய நல்வாழ்வில்-எட்டுத்

திசையும் புகழே சூழ்ந்திடவும்

ஞானம் வீரம் வெற்றியெலாம்-வந்து

நேர்பட நம்மைச் சேர்ந்திடவும்

தானாய் இரங்கி அருள்தருவாள்-நம்

துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி

மாலவன் மனைநலம் காபவளாம்-நல்ல
மாதர்கள் முகத்தில் குடியிருப்பாள்
காலம் விதிக்கும் சோதனைகள்-தமை
கருணைப் பார்வையில் துடைத்தெடுப்பாள்
ஓலம் இடுகிற பக்தர்கள் முன் -அவள்
ஒடி வந்தே துயர்துடைப்பாள்
நீல வண்ணனின் நெஞ்சினிலே-ஒளி
நித்திலமாவாள் மஹாலஷ்மி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *